Skip to main content

இந்த யுத்தம் எதற்காக? ரஷ்யாவின் நோக்கம் தான் என்ன?

Feb 25, 2022 93 views Posted By : YarlSri TV
Image

இந்த யுத்தம் எதற்காக? ரஷ்யாவின் நோக்கம் தான் என்ன? 

இன்றைய தினம் ஐரோப்பா கண்டம் முழுவதும் பரவியுள்ள பதற்ற நிலைக்கு காரணம் ரஷ்யா உக்ரைன் மீது நியாயமற்ற, மனிதாபிமானமற்ற ரீதியில் தாக்குதல் ஒன்றை ஆரம்பித்து உள்ளமைதான்.



உண்மையில் இது மூன்றாம் உலகப் போர் ஆக வெடிப்பதற்கு வாய்ப்புகள் உள்ளன என உலக நாடுகள் முழுவதும் அச்சத்தில் உள்ளன.



ரஷ்யாவின் ஆக்கிரமிப்பினால் ஒரே நாளில் பங்குச் சந்தைகள் முதல் எரிபொருள் விலை ஏற்றம் வரையில் மொத்த உலகத்தையும் பாதிக்கும் விதமான மாற்றங்கள் இடம்பெற்றுள்ளன. இத்தனைக்கும் காரணமான ரஷ்யாவின் படையெடுப்பின் நோக்கம் என்ன? உண்மையில் ரஷ்யாவின் எதிர்பார்ப்பு என்ன என்பதை பார்க்கலாம்.



ரஷ்யாவின் பாதுகாப்பு மற்றும் ஸ்திரத்தன்மையை பாதிக்கும் விதமாக நேட்டோ நாடுகள் அவற்றின் இராணுவ பரவலாக்கத்தை கிழக்கு நோக்கி அதிகரித்து வருகின்ற நிலையில், அதனை உடனடியாக நிறுத்த வேண்டும் எனும் கோரிக்கையை அடிப்படையாகக் கொண்டே முதலாவதாக ரஷ்யா உக்ரைன் எல்லையில் தனது படைகளை நிறுத்தியது.



இதற்கான அடித்தளம் கடந்த வருடம் ஜனவரி மாதமே ஆரம்பமாகி இருந்தது. 2021 ஜனவரி மாதம் உக்ரைன் ஜனாதிபதி விளாடிமிர் புடின், (Vladimir Putin) ஸிலேன்ஸ்கி, (Volodymyr Zelenskyy) உக்ரைனை நேட்டோ நாடுகளின் கூட்டத்தில் இணைத்துக் கொள்ளுமாறு அமெரிக்காவிடம் விண்ணப்பம் ஒன்றை முன்வைத்திருந்தார்.



கடந்த காலத்தில் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக ரஷ்யாவுடன் இணைந்து இருந்த உக்ரைன், இப்போது அமெரிக்காவின் நட்பு கூட்டான நேட்டோ நாடுகளுடன் இணைய முற்படுவதை ரஷ்யா விரும்பவில்லை.



இதனால் ஆத்திரமடைந்த ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின், (Vladimir Putin) ரஷ்ய படைகளை பயிற்சிக்காக கடந்த வருடம் ஆரம்பப் பகுதியில் உக்ரைன் எல்லைக்கு அனுப்பியிருந்தார். இதனைத் தொடர்ந்து கடந்த வருடத்தின் பிற்பகுதியில் மேலதிக படைகள் அனுப்பி வைக்கப்பட்டன.



டிசம்பர் மாதம் அளவில் ரஷ்யாவின் படை அதிகரிப்பைக் கண்டித்து அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன் ரஷ்யாவுக்கு எச்சரிக்கை விடுக்கும் முகமாக, ரஷ்யா உக்ரைனை ஆக்கிரமித்தால் அமெரிக்கா கடுமையான தடைகளை விதிக்கும் என கூறியிருந்தார்.



இதற்குப் பதிலாக ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புதின், அமெரிக்காவும் அதன் நட்பு நாடுகளான நேட்டோ நாடுகளும் கிழக்கு ஐரோப்பா மற்றும் உக்ரைனில் போர் பயிற்சிகளை மேற்கொள்ள மாட்டோம் என எழுத்து ரீதியான ஒப்பந்தம் ஒன்றை கைச்சாத்திட வேண்டும் என கேட்டிருந்தார்.



மேலும் அவர் குறிப்பிடும் போது, உக்ரைன் மேற்கு நாடுகளுக்கு பொம்மை போல் செயல்படுவதாகவும் சுய நாடாக தீர்மானங்களை எடுக்கவில்லை எனவும் குற்றம் சாட்டி இருந்தார். ரஷ்யா உக்ரைன் இடையே போர் ஏற்படுவது இது முதல் தடவை அல்ல.



ஏற்கனவே 2014ஆம் ஆண்டு ரஷ்யாவின் ஆதரவு பெற்ற போராட்டக்குழு கிழக்கு உக்ரைன் மீது போர் தொடுத்து கிரீமியா தீவை ரஷ்யாவுடன் இணைந்து கொண்டது. அன்று முதல் ரஷ்ய ஆதரவு பெற்ற பிரிவினைவாத கும்பல்கள் உக்ரைன் ராணுவத்துடன் தொடர்ந்து முரண்பாடுகளில் ஈடுபட்டு வந்துள்ளன.



முன்னர் சோவியத் ஒன்றியத்தின் ஒரு பகுதியாக இருந்ததால் உக்ரைனில் பெரும்பான்மையானவர்கள் ரஷ்ய மொழி பேசுகிறார்கள். மற்றும் ரஷ்யாவுடன் கலாச்சார, சமூகத் தொடர்புகளை அதிகளவில் கொண்டுள்ளனர்.



ஆனால் 2014ஆம் ஆண்டு நடைபெற்ற ஆக்கிரமிப்பின் பின்னர் பலரும் ரஷ்யா மீது வெறுப்புணர்வை வளர்த்துக்கொண்டுள்ளதோடு, உக்ரைன் தனி நாடாக இறையாண்மையுடன் இருப்பதையே விரும்புகின்றனர்.



2014ஆம் ஆண்டு ரஷ்யா உக்ரைன் மீது மேற்கொண்ட தாக்குதலில் 14,000 பேர் அளவில் பலியாகி இருந்தனர். டான்பாஸ் பகுதி, அதாவது இப்போது மோதல்கள் உருவாகியுள்ள பிரதேசம், உட்பட கிழக்கு உக்ரைனில் ஆயுத மோதலை நிறுத்த ரஷ்யாவும் உக்ரைனும் 2014ஆம் ஆண்டில் மின்ஸ்க் அமைதி ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டிருந்தன.



ஆனால் இந்த பகுதியில் முரண்பாடுகள் நீடித்து வருவதால்,’அமைதிகாப்பாளர்களை’ அனுப்புவதாக ரஷ்யா கூறி படைகளை அனுப்ப ஆரம்பித்தது. இறையாண்மை உடைய பிரதேசம் ஒன்றின் மீது ஆக்கிரமிப்பதற்கு ரஷ்யா கூறும் போலி காரணமாக இது சர்வதேச சமூகத்தால் பார்க்கப்படுகிறது.



இப்போது ரஷ்யா உக்ரேன் இடையே உருவாகியுள்ள மோதல், பொருளாதார ரீதியிலும் இராணுவ, பாதுகாப்பு ரீதியிலும் ஏனைய ஐரோப்பிய நாடுகளுக்கு மிகப்பெரிய அச்சுறுத்தலை உருவாக்கக் கூடியது. இதன் காரணமாகவே அமெரிக்காவும் உக்ரைனும் ரஷ்யா மீது தடைவிதிக்கும் போது, ஏனைய நேட்டோ மற்றும் ஐக்கிய நாடுகள் சபையில் உறுப்பினர்களாக உள்ள நாடுகள் இணைந்து ரஷ்யா மீது தடை விதிக்க முன்வந்துள்ளன.



பிரச்சினைகளை தீர்ப்பதற்கு கடந்த வாரம் பிரான்ஸ் ஜனாதிபதி, ரஷ்ய ஜனாதிபதி விளாடிமிர் புடின் மற்றும் உக்கிரைன் ஜனாதிபதி விளாடிமிர் ஸிலேன்ஸ்கி ஆகியவர்களை சந்தித்து இருதரப்பு கலந்துரையாடல்களில் ஈடுபட்டு இருந்த போதும் இந்தப் பேச்சுவார்த்தைகள் எந்தவித பயனும் அளிக்கவில்லை. இப்போது இந்தியா உட்பட மேலும் பல நாடுகள் ரஷ்யா சமாதானப் பேச்சுவார்த்தைக்கு முன் வர வேண்டும் என வலியுறுத்தி வருகின்றன.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்

யாழ். - புங்குடுதீவு அரசினர் வைத்தியசாலையை அண்டிய கடற்கரை பகுதியில் மனித எலும்பு கூட்டு எச்சங்கள் மீட்கப்பட்ட பகுதியில் இன்று வியாழக்கிழமை அகழ்வு பணிகள் ஆரம்பித்துள்ளன.

3 Days ago

பிரபல தென்னிந்திய பின்னணி பாடகி உமா ரமணன், உடல் நலக்குறைவால் தனது 69ஆவது வயதில் சென்னையில் நேற்று (01) காலமானார்.

3 Days ago

கல்வி சாரா ஊழியர்களின் 15 சதவீத வேதன குறைப்பிற்கு எதிர்ப்பு தெரிவித்து தொடர் தொழிற்சங்க நடவடிக்கையை முன்னெடுக்கப்படவுள்ளதாக பல்கலைக்கழக தொழிற்சங்கங்களின் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

3 Days ago
மேலும் படிக்க...
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை