Skip to main content

அமைச்சரவை தீர்மானத்திற்கு அவசர சட்டம் பிறப்பிக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி

Aug 26, 2020 327 views Posted By : YarlSri TV
Image

அமைச்சரவை தீர்மானத்திற்கு அவசர சட்டம் பிறப்பிக்காதது ஏன்? மு.க.ஸ்டாலின் கேள்வி 

 அரசு பள்ளி மாணவர்களுக்கு உள் ஒதுக்கீடு வழங்கும் அமைச்சரவை தீர்மானத்திற்கு அவசரச் சட்டம் பிறப்பிக்காதது ஏன்? என்று மு.க.ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார். திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: ஏழை, எளிய, கிராமப்புற மற்றும் நகர்ப்புற மக்களுக்கு எதிரான நீட் தேர்வு முற்றாகக் கைவிடப்பட வேண்டும் என்பதிலும், கலைஞர் தலைமையிலான திமுக ஆட்சியில் பின்பற்றியவாறு, 12ம் வகுப்புத் தேர்வு மதிப்பெண் அடிப்படையிலேயே மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை நடைபெற வேண்டும் என்ற கோரிக்கையிலும் தமிழ்நாட்டு மக்கள் ஒன்றுபட்டு நிற்கிறார்கள்.



திமுகவின் ஆதி அடிப்படையான இந்தக் கருத்தைத் தமிழ்நாட்டில் உள்ள அனைத்துக் கட்சிகளும் ஏற்றுக் கொண்டுள்ளன. பரவலான கருத்தொற்றுமையின் அடிப்படையில், தமிழக சட்டப்பேரவையில், நீட் தேர்வில் இருந்து தமிழ்நாட்டுக்கு விலக்கு அளிக்கக் கோரி இரு சட்ட மசோதாக்கள் மத்திய அரசுக்கு அனுப்பி வைக்கப்பட்டன. நீட் தொடர்பான மசோதாக்களுக்குக் குடியரசுத் தலைவர் ஒப்புதல் தர மறுத்து, அந்த மசோதாக்கள் திருப்பி அனுப்பப்பட்டு விட்டன என்ற தகவல்கள் ஆதாரபூர்வமாக வெளியான போதும், அதை மூடி மறைப்பதிலேயே முதல்வர் பழனிசாமி தலைமையிலான அரசு குறியாக இருந்தது.



சமூகநீதியிலோ, ஏழை மாணவர்கள் நலனிலோ துளியும் அக்கறையற்ற அதிமுக அரசு, நீட் தேர்வில் இருந்து விலக்குப் பெறுவதற்குத் தேவையான முயற்சிகளை எடுக்காமல், திசைதிருப்பும் செயலிலேயே மாதங்களைக் கடத்தி விட்டது. சட்டமன்றப் பேரவையிலும் கூட உண்மைக்கு மாறான தகவலைத் தெரிவித்து தமிழக மக்களின் கண்களில் மண்ணைத் தூவ முனைந்தது. சட்டப் பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்ட சட்ட முன்வடிவுகளை மத்திய அரசுக்கு அனுப்பி, மூன்றாண்டுகள் கடந்து விட்ட நிலையில், அந்தச் சட்ட மசோதாக்களின் தற்போதைய கதி என்ன என்பது குறித்து இப்போதாவது தமிழக மக்களுக்கு முதல்வர் பழனிசாமி விளக்கம் அளிக்க வேண்டும்.



டெல்லி எஜமானர்கள் கோபித்துக் கொள்வார்களோ என்று இனியும் மவுனம் சாதிக்கக்கூடாது. கொரோனா பெருந்தொற்று மக்களை வாட்டி வதைத்து வரும் தருணத்தில், காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல்காந்தி, மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி, டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவால் போன்றோர் நீட் தேர்வை ஒத்திவைக்கக் கோரிக்கை விடுத்து அழுத்தம் கொடுத்து வருகின்றனர். 12ம் வகுப்புப் பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகி, கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை முனைப்பாக நடந்து கொண்டிருக்கிறது.



மருத்துவக் கல்லூரிகளுக்கான மாணவர் சேர்க்கை எந்த அடிப்படையில் நடக்கப் போகிறது என்பதில் நிலவும் குழப்பம் காரணமாக, லட்சக்கணக்கான மாணவர்களும் பெற்றோர்களும் குழப்பத்திலும் கொந்தளிப்பிலும் உள்ளனர். எனவே, தமிழக சட்டப் பேரவையின் சிறப்புக் கூட்டத்தை உடனடியாகக் கூட்டி, நீட் தேர்வை நிராகரித்து, 12ம் வகுப்பு மதிப்பெண்கள் அடிப்படையிலேயே மாணவர் சேர்க்கை நடைபெறும் என பிரகடனப்படுத்தி, நமது கோரிக்கையின் நியாயத்தை மத்திய அரசு ஏற்கச் செய்து, உடனடியாக நடைமுறைப்படுத்த வேண்டும் என்று தமிழக மக்கள் சார்பில் அழுத்தந்திருத்தமாக வலியுறுத்துகிறேன்.



நீட் சட்ட முன்வடிவுகளுக்கு ஒப்புதல் பெறுவதில் அடைந்த படு தோல்வியை மூடிமறைக்க, அரசுப் பள்ளி மாணவர்களுக்கு 7.5 சதவீதம் உள்ஒதுக்கீடு வழங்கி கடந்த ஜூலை மாதம் தமிழக அமைச்சரவை கூடி நிறைவேற்றிய தீர்மானத்தின் நிலை என்ன என்பது இதுவரை புதிராகவே இருக்கிறது. ‘இது குறித்து அவசரச் சட்டம் கொண்டு வர நடவடிக்கை எடுக்கப்படுகிறது’ என்று முதல்வர் நேற்று திடீரென அறிவித்துள்ளார். ஒரு மாதத்திற்கும் மேலாக அமைச்சரவைத் தீர்மானத்தின் மீது மேல் நடவடிக்கை எடுக்காமல் குறட்டை விட்டது ஏன்?.



7 தமிழர்களை விடுவிப்பது தொடர்பான கோப்புகள் ஆளுநர் மாளிகையில் பல ஆண்டுகளாகக் குளிர்பதனப் பெட்டியில் தூங்கிக் கொண்டிருப்பதைப் போல, அரசுப் பள்ளி மாணவர்களுக்கான உள்ஒதுக்கீடு முடிவும் அமைந்து விடத் தமிழக அரசு அனுமதிக்கப் போகிறதா அல்லது  மாநில அரசின் உரிமையைச் சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து தட்டிக் கேட்கப்போகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளத் தமிழ்நாடே ஆவலாக இருக்கிறது. பல்லாயிரம் கோடி டெண்டர், கொள்முதல் விவகாரங்களில் ஒவ்வொரு மாவட்டமாக ஓடோடிச் சென்று காட்டும் தீவிரத்திலும் அக்கறையிலும், கோடியில் ஒரு பங்கையேனும் மாணவர்கள் நலனில் காண்பிக்க முதல்வர் பழனிசாமி முன்வர வேண்டும். இந்த ஆண்டு மருத்துவ மாணவர் சேர்க்கை 12ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகளின் அடிப்படையில் அமைவதை உறுதிப்படுத்த வேண்டும் என மீண்டும் மீண்டும் வலியுறுத்துகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார். மாநில அரசின் உரிமையைச் சுயமரியாதையோடு தலைநிமிர்ந்து தட்டிக் கேட்கப்போகிறதா என்பதைத் தெரிந்து கொள்ளத் தமிழ்நாடு ஆவலாக இருக்கிறது.



* விஜயகாந்த்துக்கு பிறந்தநாள் வாழ்த்து

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் நேற்று தனது முகநூல் பதிவில் கூறியிருப்பதாவது:

தலைவர் கலைஞரின் குறையாத பாசத்திற்குப் பாத்திரமாகத் திகழ்ந்தவரும், என்றும் எனது இனிய அன்பு நண்பரும், தேமுதிக தலைவருமான விஜயகாந்த்துக்கு மனமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். 68ல் அடியெடுத்து வைக்கும் அவர் இன்னும் பல்லாண்டு வாழ வாழ்த்துகிறேன். அவர் நலமும், குணமும், திடமும் பெற பெரிதும் விரும்புகிறேன். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை