Skip to main content

21 ஆவது திருத்தத்துக்குள் மறைந்திருக்கும் பேராபத்து

May 25, 2022 108 views Posted By : YarlSri TV
Image

21 ஆவது திருத்தத்துக்குள் மறைந்திருக்கும் பேராபத்து 

கோட்டபாய ராஜபக்ச அரசாங்கத்தினால் கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் அங்கீகரிக்கப்பட்ட 20 ஆவது திருத்தச் சட்டத்தில் சில விடயங்களையும் உள்ளடக்கியே 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல்வரைபு அமைச்சரவையில் சமர்ப்பிக்கப்பட்டுள்ளது. இந்த நகல்வரைபு, கோட்டாபய ராஜபக்சவுடன் முரண்பட்டு வெளியேறித் தற்போது ரணில் விக்ரமசிங்க தலைமையிலான அமைச்சரவையில் அமைச்சராகப் பதவியேற்றுள்ள சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழுவினாலேயே தயாரிக்கப்பட்டிருக்கின்றது. விஜயதாச ராஜபக்சவுக்கு நெருக்கமான இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் சில சட்டத்தரணிகளும் நகல் வரைபு தயாரித்த குழுவில் அங்கம் வகித்திருக்கின்றனர். இலங்கையின் ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மேலும் உறுதிப்படுத்தும் துணிகரம் இந்த நகல் வரைபில் தெரிகிறது.



கோட்டாபாய மற்றும் மகிந்த ராஜபக்ச ஆகியோ் உள்ளிட்ட ராஜபக்ச குடும்பமும் அவர்களுக்கு நெருக்கமான அரசியல்வாதிகளையும் காப்பாற்றும் முறையிலேயே 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு தயாரிக்கப்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ள நிலையில், எழுபது வருட இனப் பிரச்சினையின் வீரியம் நீக்கம் செய்யப்படக்கூடிய பேராபத்தும் உட்பொதிந்துள்ளது.



21 இற்கான நகல்வரைபைத் தயாரித்த குழுவில் பிரதான பங்காற்றிய இலங்கையின் மூத்த சட்டத்தரணி விஜயதாச ராஜபக்ச, கோட்டாபய ராஜபக்சவுடன் நெருக்கமாக இருந்தபோது, 19 ஆவது திருத்தச் சட்டத்தை ரத்துச் செய்து 20 ஆவது திருத்தச் சட்டத்தைக் கொண்டு வருவதற்கு நிபந்தனையோடு ஆதரவு கொடுத்திருந்தார். 19 ஆவது திருத்தத்தின் கதாநாயகநாகவும் இவரே இருந்தார்.



20 ஆவது திருத்தம் நடைமுறைக்கு வந்த சில நாட்களில் கோட்டாபய ராஜபக்சவுடன் முரண்பட்டுக் கொண்டு அரசதரப்பில் இருந்து விலகி நாடாளுமன்றத்தில் சுயாதீனமாகச் செயற்பட்டும் வந்த ஒருவர்.



இந்த நிலையிலேயே ரணில் விக்கிரமசிங்க பிரதமராகப் பதவியேற்றபோது, அவர் தலைமையிலான புதிய அமைச்சரவையிலும் அங்கம் வகிக்கிறார். கோட்டாபய ராஜபக்சவிடமே அமைச்சுப் பதவிக்கான நியமனக் கடிதத்தையும் பெற்றிருந்தார்.



இதன் பின்னணியில் தயாரிக்கப்பட்ட 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபு, ராஜபக்ச குடும்பத்தைக் காப்பாற்றும் முறையில் அமைந்துள்ளதாக கொழும்பு உயர்மட்ட அரசியல் தகவல்கள் கூறுகின்றன.



வெளிநாடொன்றில் பிராஜாவுரிமை பெற்றவர்கள், இலங்கையில் அரசியலில் ஈடுபட முடியொதென்ற விடயம் நகல் வரைபில் உள்ளடக்கப்பட்டிருந்தாலும், அரசியலில் ஈடுபடுவது ஒருவருடைய அடிப்படை உரிமை என்ற காரணத்தை முன் நிறுத்தி. இறுதிநேரத்தில் அந்த விடயம் நகல் வரைபில் இருந்து நீக்கப்படலாமெனக் கூறப்படுகின்றது.



ஏனெனில் கோட்டா, மகிந்த ஆகியோருடைய சகோதரரான பசில் ராஜபக்ச அமெரிக்கப் பிரஜாவுரிமை பெற்றிருக்கிறார். அத்துடன் ராஜபக்ச குடும்பத்துக்கு நெருக்கமான இரட்டைப் பிராஜாவுரிமை பெற்றுள்ள சிலரும் நாடாளுமன்ற உறுப்பினர்களாக இருக்கின்றனர்.



ஆகவே இதன் பின்னணியில் இரட்டைப் பிரஜாவுரிமை உள்ளவர்கள் இலங்கை அரசியலில் ஈடுபடலாம் என்பதற்குரிய மாற்று ஏற்பாடு ஒன்றைச் செய்வதற்குரிய வழிமுறைகள் ஆராயப்படுகின்றன.



குறிப்பாக 21 ஆவது திருத்தம் நிறைவேற்றப்பட்டால், புதிய நாடாளுமன்ற பதவிக் காலத்தில் இருந்தே நடைமுறைக்கு வருவதற்கான சட்ட ஏற்பாடுகள் செய்யப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் உண்டெனலாம்.



இப் பின்புலத்திலேயே, 19 ஆவது திருத்தச் சட்டம் 20 ஆவது திருத்தச்சட்டம் போன்றவற்றில் உள்ள சில ஏற்பாடுகள் 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபில் உள்ளடக்கப்பட்டுள்ளமை தெளிவாகத் தெரிகிறது.



அரச தலைவர் அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்க முடியுமென 21 ஆவது திருத்தத்திற்கான நகல் வரைபில் கூறப்பட்டுள்ளது. ஆனால் 19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் அரச தலைவர் அமைச்சுப் பொறுப்புக்களை வகிக்க முடியாது.



அரச தலைவர் தொடர்ந்தும் அமைச்சுக்களைத் தக்க வைத்துக் கொள்ளவும், எந்தவொரு அமைச்சுக்களின் பொறுப்புக்களையும் அரச தலைவர் தனதாக்க முடியுமென்ற கருத்திலும், 21 ஆவது திருத்தத்துக்கான நகல் வரைபில் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.



ஆனால் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் சில மூத்த உறுப்பினர்கள், அரச தலைவருக்குரிய அந்த பொறுப்புக்கள் முற்றாக நீக்கப்பட வேண்டுமென வாதிடுகின்றனர்.  



19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம், நாடாளுமன்ற அமர்வு ஆரம்பமான நாளில் இருந்து நான்கரை வருடங்கள் சென்ற பின்னரே ஜனாதிபதியால் நாடாளுமன்றத்தை கலைக்கமுடியும் என்ற ஏற்பாடு உள்ளது.



ஆனால் 20 ஆவது திருத்தச்சட்டத்திற்கான நகல் வரைவில் இந்த ஏற்பாடு இரண்டரை வருடங்களின் பின்னர், ஜனாதிபதி நாடாளுமன்றத்தைக் கலைக்க முடியுமெனக் குறிப்பிடுகின்றது.



19 ஆவது திருத்தச் சட்டத்தின் பிரகாரம் இலங்கை மத்திய வங்கி ஆளுநர் உள்ளிட்ட முக்கிய அரச திணைக்களங்களுக்குரிய பணிப்பாளர் நியமனங்கள் அனைத்தும் அரசியல் சாராத அரசியலமைப்புப் பேரவை (Constituent council) ஒன்றின் மூலமாகவே நியமிக்கப்பட வேண்டுமெனக் கூறப்பட்டுள்ளது.



21 ஆவது திருத்தத்துக்கான நகல் வரைபில் இது உள்ளடக்கப்பட்டிருந்தாலும், அரசியலமைப்புப் பேரவை நியமனம் பற்றிய வெளிப்படைத்தன்மை போதியதாக இல்லையென இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டுகின்றனர்.



இதன் காரணத்தினாலேயே 21 ஆவது திருத்தச்சட்டம் தொடர்பாக இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் நான்கு புதிய பரிந்துரைகளை முன்வைத்துள்ளது.



முதலாவது- நாணயச் சபையின் (Monetary Board) உறுப்பினர்கள் அரசமைப்புப் பேரவையின் ஒப்புதலுடன் நியமிக்கப்பட வேண்டும்.



இரண்டாவது அமைச்சுக்களின் செயலாளர்கள், மாகாண ஆளுநர்கள், வெளிநாட்டுகளுக்கான தூதுவர்கள், தூதரகத் பணிப்பாளர்கள் உள்ளிட்ட வெளிநாட்டு இராஜதந்திரிகளைப் பிரதமரின் ஆலோசனையோடும் அமைச்சரவையின் அங்கீகாரத்துடனும் நியமித்தல்.



மூன்றாவது- அரசமைப்புப் பேரவையின் பரிந்துரைக்கமைய நியமிக்கப்பட்ட சட்ட ரீதியான ஒரு அமைப்பு ஊடாக ஜனாதிபதியின் பொது மன்னிப்புக்கள் சிபார்சு செய்யப்பட வேண்டும்.



நான்காவது- நிதியைக் கையாளும் சுதந்திரம் அதற்குரிய வெளிப்படைத் தன்மை மற்றும் பொறுப்புக்கூறல் ஆகியவற்றை மேம்படுத்துவதற்கான சட்ட ஏற்பாடுகள்.



இந்த நான்கு பரிந்துரைகளும் நாடாளுமன்ற விவாதத்தின்போது பரிசீலிக்கப்படலாம். ஆனால் அவற்றை ஏற்றுக்கொள்வதற்கான வாய்ப்புகள் இருப்பதாகத் தெரியவில்லை. குறிப்பாக நிறைவேற்று அதிகாரமுள்ள ஜனாதிபதி முறையை நீக்க வேண்டுமென்ற பரிந்துரைகள் 21 இற்கான பரிந்துரைகளில் முழுமையாக இல்லை.



இதனால் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்துடன் முரண்படும் நிலைமை ஏற்பட்டுள்ளதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.



எனினும் ரணில் விக்கிரமசிங்கவுக்கு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் மூத்த உறுப்பினர்கள் பலர் ஆதரவாக இருக்கும் நிலையில், குறிப்பிடத்தக்களவு சமரசம் வரக்கூடிய ஏது நிலைகளும் தென்படுகின்றன.



அத்துடன் விஜயதாச ராஜபக்ச இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்தின் முன்னாள் தலைவர் என்ற அடிப்படையில், 21 ஆவது திருத்தச் சட்டத்துக்கான நகல் வரைபை அரங்கேற்றுவார் என்ற எதிர்வுகூறல்களும் இல்லாமலில்லை.



அதேவேளை, இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்த பரிந்துரைகளிலும், அமைச்சர் விஜயதாச ராஜபக்ச தலைமையிலான குழு தயாரித்த 21 ஆவது திருத்தத்துக்கான நகல் வரைபிலும் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பைச் சிறிய மாற்று ஏற்பாடுகளோடு (alternative arrangements) பாதுகாக்கும் அம்சங்கள் மாத்திரமே காணப்படுகின்றன.



1980 ஆம் ஆண்டு ஜே.ஆர் ஜயவர்த்தன முன்வைத்த மாவட்ட அபிவிருத்திச் சபை யோசனைகளில் இருந்து, இன்று 21 ஆவது திருத்தச் சட்டத்துக்கான நகல் வரைபு மற்றும் இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கம் முன்வைத்துள்ள பரிந்துரைகள் வரையும், ஒற்றையாட்சி என்ற கோட்பாட்டுப் பட்டியல் நீளுவதையே தமிழர்கள் காண்கிறார்கள்.



ஆனால் இதுவரைக்கும் தமிழ்த்தேசியக் கட்சிகளோ அல்லது தமிழ்ச் சிவில் சமூக அமைப்புகளோ அல்லது பல்கலைக்கழகக் கல்விச் சமூகமோ சுட்டிக்காட்டவேயில்லை.



அதாவது பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளினால் சிங்கள மக்கள் வீதிக்கு இறங்கிப் போராடி, வன்முறைகளிலும் கைகலப்புகளிலும் ஈடுபட்ட பின்னரானதொரு சூழலில், இலங்கை அரசியல் யாப்பில் திருத்தங்களைச் செய்ய முற்படும் சிங்கள அரசியல் தலைவர்கள், சிங்களக் கல்வியாளர்கள், சிங்களச் சட்டத்தரணிகள் அனைவருமே எழுபது ஆண்டுகால இனப்பிரச்சினை விவகாரத்தை மூடிறைக்கின்றனர்.



வேண்டுமானால் 13 ஆவது திருத்தச் சட்டத்தை அமுல்படுத்தினால் போதும் என்ற மன நிலையோடும் அவர்கள் நின்றுவிடுகின்றனர்.



பௌத்த சமயத்துக்கு முன்னுரிமை கொடுக்கும் இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பு முற்று முழுதாக மாற்றப்பட வேண்டும் என்ற கருத்து, மாக்சியவாதிகள் எனத் தம்மைதாமே கூறிக்கொள்ளும் ஜே.வி.பி மற்றும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளிடமோ, இடதுசாரிகள், சிங்கள முற்போக்குவாதிகளிடமோ இல்லை என்பதையே சமீபகாலக் காய் நகர்த்தல்கள் எடுத்தியம்புகின்றன. அதாவது பொருளாதார நெருக்கடி, விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளின் பின்னரானதொரு சூழலில், சிங்கள மக்களின் மேற்படி மன நிலைகளை வெளிப்படையாகவே காண முடிகிறது.



ஆனால் இவைபற்றித் தமிழ்த்தேசியக் கட்சிகள் எந்தவொரு ஆராய்வும் இல்லாமல், பொருளாதார நெருக்கடி. விலைவாசி உயர்வுப் பிரச்சினைகள் முதலில் தீரட்டும் என்று கருதி அமைதியாக இருக்கின்றனர் போலும்.



கொழும்பில் உள்ள அமெரிக்க - இந்திய தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் வடக்குக் கிழக்குப் பகுதிகளுக்குச் சென்று அவ்வாறுதான் போதிக்கின்றனர்.



அதாவது முதலில் பொருளாதார நெருக்கடி முடிவுக்கு வரட்டும், அதன் பின்னர் நிரந்த அரசியல் தீர்வு குறித்துப் பேசலாம் என்ற கோணத்தில் பரிந்துரைக்கின்றனர்.



இதனத் தமிழ்த்தேசியக் கட்சிகளும் குறிப்பாகத் தமிழ்த்தேசியக் கூட்டமைப்பை மையப்படுத்திய தமிழரசுக் கட்சியும் அப்படியே செயற்படுத்துகின்றது.



அமெரிக்க - இந்திய தூதுவர்கள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியப் பிரதிநிதிகளும் கொழும்பில் சிங்கள அரசியல் தலைவர்களைச் சந்திக்கும்போது, பொருளாதார நெருக்கடிக்குரிய தீர்வுகள் குறித்து மாத்திரமே உரையாடுகின்றனர்.



வெளிநாட்டுத் தூதுவர்களைப் பொறுத்தவரை தமது புவிசார் மற்றும் பூகோள அரசியல் தேவைகளுக்காக இலங்கை ஒற்றையாட்சி அரசு என்ற கட்டமைப்பைப் பாதுகாக்க வேண்டும் என்ற கோணத்தில் மாத்திரமே சிந்திக்கின்றனர் என்பது பட்டவர்த்தனம்.



2009 மே மாதத்திற்குப் பின்னரான சூழலில். வல்லாதிக்க நாடுகளின் இந்த நகர்வை அவதானிக்க முடிகிறது.



ஜே.வி.பி உள்ளிட்ட பிரதான சிங்களக் கட்சிகளின் அரசியல் தலைவர்கள் மற்றும் சிங்கள முற்போக்காளர்கள் கூட இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்பை மாற்ற விரும்பவில்லை என்பதை அமெரிக்க - இந்திய அரசுகள் நன்கு தெரிந்துவைத்துள்ளமையே இந்த நகர்வுக்குப் பிரதான காரணம்.



சிங்கள அரசியல் தலைவர்களின் "ஒற்றையாட்சி அரசு" என்ற அந்த பௌத்த தேச அடிப்படைவாதச் சிந்தனைப் போக்கில் மாற்றங்களை ஏற்படுத்த இந்த வல்லாதிக்க நாடுகளின் தூதுவர்களும் முற்படவில்லை. அதனை மாற்ற விரும்பவுமில்லை.



இதனாலேயே ஈழத் தமிழர்களின் எழுபது ஆண்டுகால அரசியல் போராட்டத்தை இலங்கை மக்களின் மனித உரிமை மீறல் பிரச்சினையாகவும், ஜனநாயகப் பாதுகாப்பு ஏற்பாடுகளாகவும் மாத்திரமே அமெரிக்க - இந்திய அரசுகள் மடைமாற்றி வருகின்றன. அதற்காகவே நல்லிணக்கம் என்ற சொல்லாடலும் 2015 இல் இறக்குமதி செய்யப்பட்டது.



இந்தக் கருத்தியல் பின்னணியோடுதான், 2009 இற்குப் பின்னர் அரசியல் ரீதியான பாதுகாப்பு இல்லாமல் இருக்கும் ஈழத்தமிழர்களைத் திருப்திப்படுத்தி, இலங்கை ஒற்றையாட்சிக் கட்டமைப்புக்குள் இணைந்து வாழ வேண்டும் என்ற சிந்தனைகளை வடக்குக் கிழக்கில் வேகமாகப் புகுத்தி வருகின்றனர்.



இலங்கை மக்களின் மனித உரிமைப் பிரச்சினை, ஜனநாயகப் பாதுகாப்பு என்ற வல்லாதிக்க நாடுகளின் கருத்தியலை உள்ளவாங்கியுள்ள தமிழ்த்தேசியக் கட்சிகளின் சில தலைவர்கள், சிவில் சமூகச் செயற்பாட்டாளர்கள் மற்றும் சில தமிழ் அரசசார்பற்ற நிறுவனங்களின் பிரமுகர்கள், 21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பான ஏற்பாடுகள் தொடர்பாகக்கூட எதுவுமே பேசாமல் அமைதிகாக்கின்றனர் என்பது பகிரங்கமாகிறது.



ஆனால் 21 ஆவது திருத்தச் சட்டத்திற்கான நகல் வரைபைத் தயாித்துக் கொண்டிருக்கும் குழுவும் மற்றும் பிரதான சிங்கள அரசியல் கட்சிகளும், 21 ஆவது திருத்தச் சட்ட வரைபுக்குள் தேர்தல்முறை மாற்றம் உள்ளிட்ட ஒற்றையாட்சிக் கட்டமைப்பைப் புதிய வடிவத்தில் உறுதிப்படும் அரசியல்ரீதியான சில மாற்றங்களையும் உட்புகுத்த முற்படுவதாகத் தகவல்கள் கசிந்துள்ளன.



குறிப்பாக மாகாண சபைகளின் எல்லைமீள் நிர்ணயம், அரச செலவுகளைக் குறைக்க மாகாண சபைகளின் எண்ணிக்கைகளைக் குறைத்தல் அல்லது வேறு மாகாணங்களை இணைத்து ஒன்றாக்கி மாகாணங்களின் எண்ணிக்கைகளைக் குறைத்தல் உள்ளிடட அரசியல்ரீதியான பரிந்துரைகள் ஏலவே இலங்கை நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளன.



21 ஆவது திருத்தச் சட்டம் தொடர்பாக நாடாளுமன்ற விவாத்தில் இது பற்றிய விதப்புரைகள் பரிசீலிக்கப்படக்கூடிய சந்தர்ப்பங்கள் இல்லாமலில்லை.



அதாவது 13 ஆவது திருத்தச் சட்டம். நிரந்தர அரசியல் தீர்வல்ல என்று தமிழ்த்தரப்பு ஏலவே கூறிவிட்டதொரு நிலையிலும், இலங்கை ஒற்றையாட்சி அரசியல் யாப்பில் உள்ள குறைந்தபட்ச அதிகாரப் பகிர்வு முறையைக்கூட நீக்கம் செய்யக்கூடிய மன நிலையிலேயே சிங்கள அரசியல் தலைவர்கள் இருக்கின்றனர் என்பதைச் சமீபகாலச் செயற்பாடுகள் காண்பிக்கின்றன.



இந்த விடயம் அமெரிக்க- இந்திய அரசுகளுக்கும் தெரியாததல்ல.



ஆனால் 2012 ஆம் ஆண்டில் இருந்து இலங்கை தொடர்பாக அமெரிக்காவினால் ஜெனீவாவில் முன்வைக்கப்பட்டு வரும் தீர்மானங்களில் 13 ஆவது திருத்தச் சட்டம் அரசியல் தீர்வுக்கான முன்னேற்பாடெனப் பரிந்துரைக்கப்பட்டிருக்கின்றன.



இப் பரிந்துரைகூட சிங்களத் தலைவர்களைச் சமாளிக்கவா அல்லது தமிழ்த்தரப்பைத் திருப்திப்படுத்தவா என்பதை இனிமேலாவது தமிழ்த்தேசியக் கட்சிகள் பகிரங்கப்படுத்த வேண்டும்.



13 ஐ நடைமுறைப்படுத்துமாறு கோரி நாரேந்திரமோடிக்குக் கடிதம் அனுப்பிய சில வாரங்களிலேயே பொருளாதார நெருக்கடி விலைவாசி உயர்வுப் பிரச்சினைகளும் எழுந்தன என்பதையும், கடிதம் அனுப்பிய ஆறு தமிழ்த்தேசியக் கட்சிகளும் புரிந்துகொள்ளாமல் இல்லை.



ஆகவே 13 அல்ல. வடக்குக் கிழக்கு இணைந்த சுயாட்சிக் கட்டமைப்புத்தான் நிரந்நதர அரசியல் தீர்வு என்பதை ஒருமித்த குரலில் வெளிப்படுத்தத் தவறியதன் விளைவுகள்தான், 2009 இற்குப் பின்னரான சிங்கள அரசியல் தலைவர்களின் இத் துணிவுக்குக காரணம்.



வல்லாதிக்க நாடுகளும் ஒற்றையாட்சியைப் பாதுகாத்துத் தமது புவிசார் அரசியல் - பொருளாதார நோக்கங்களை நிறைவேற்றத் தமக்கிடையே நிலவிய ஒருமித்த கருத்து இல்லாத சூழலைச் சாதமாகியது என்பதையும் தமிழ்த்தரப்பு இனியாவது பகிரங்கமாக ஒப்புக்கொண்டு, அடுத்த நகர்வை முன்னெடுக்கத் தயாராக வேண்டும்.  


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை