Skip to main content

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் கத்திக்குத்து தாக்குதலும் நடந்தது!

Dec 14, 2020 281 views Posted By : YarlSri TV
Image

அமெரிக்காவில் ஜனாதிபதி டிரம்பின் ஆதரவாளர்கள் நடத்திய பேரணியில் வன்முறை வெடித்தது. இதில் கத்திக்குத்து தாக்குதலும் நடந்தது! 

உலகின் மிகப்பெரிய வல்லரசு நாடான அமெரிக்காவில் பெரும் எதிர்பார்ப்புக்கு மத்தியில் கடந்த மாதம் ஜனாதிபதி தேர்தல் நடந்து முடிந்தது.



இதில் குடியரசுக்கட்சி சார்பில் போட்டியிட்ட தற்போதைய ஜனாதிபதி டிரம்பை விட ஜனநாயக கட்சி வேட்பாளர் ஜோ பைடன் அதிக வாக்குகளை பெற்று வெற்றி பெற்றார்.



ஆனால் ஜனாதிபதி டிரம்ப் இன்னமும் தனது தோல்வியை ஒப்புக்கொள்ள மறுத்து வருகிறார். தேர்தலில் முறைகேடுகள் நடந்ததாக கூறி அவர் சட்டப் போராட்டம் நடத்தினார்.



ஜோ பைடனின் வெற்றியை எதிர்த்து டிரம்ப் மற்றும் அவரது ஆதரவாளர்கள் தரப்பில் தொடரப்பட்ட அனைத்து வழக்குகளும் தள்ளுபடி செய்யப்பட்டன.



டிரம்ப், இறுதியாக அந்த நாட்டின் சுப்ரீம் கோர்ட்டை நம்பியிருந்தார். ஆனால் தேர்தல் முடிவுகளை மாற்றியமைக்க கோரி டிரம்ப் தரப்பில் தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டும் தள்ளுபடி செய்தது.



இதன் மூலம் அவரது சட்ட போராட்டத்துக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டதால் அவர் வெள்ளை மாளிகையை விட்டு வெளியேற தயாராகிவிட்டார்.



ஆனாலும் டிரம்பின் வலதுசாரி ஆதரவாளர்கள் டிரம்புக்கு அநீதி இழைக்கப்பட்டதாகவும் பல மாகாணங்களில் அவர் திட்டமிட்டே தோற்கடிக்கப்பட்டதாகவும் கூறி தொடர்ந்து பேரணியில் ஈடுபட்டு வருகின்றனர்.



அதன் தொடர்ச்சியாக நேற்று முன்தினம் டிரம்பின் ஆதரவாளர்கள் 10 ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் தலைநகர் வாஷிங்டனில் பெரும் திரளாக திரண்டு பேரணியில் ஈடுபட்டனர்.



அவர்கள் தேர்தலில் பெரும் முறைகேடுகள் நடந்ததாகவும், டிரம்பின் வாக்குகள் திருடப்பட்டதாகவும் கோஷங்களை எழுப்பியபடி பேரணியாக சென்றனர்.



இதனிடையே வெள்ளை மாளிகைக்கு அருகே இனவெறிக்கு எதிரான ‘பிளாக் லைவ்ஸ் மேட்டர்’ என்ற அமைப்பை சேர்ந்த நூற்றுக்கணக்கானோர் டிரம்புக்கு எதிராக பேரணியில் ஈடுபட்டிருந்தனர்.



அப்போது டிரம்ப் ஆதரவு பேரணி வெள்ளை மாளிகையை கடந்த போது இரு தரப்புக்கும் இடையே மோதல் ஏற்பட்டது. சிறிது நேரத்தில் இந்த மோதல் பெரும் வன்முறையாக வெடித்தது. இரு தரப்பை சேர்ந்தவர்கள் கையில் கிடைத்த பொருட்களால் ஒருவரை ஒருவர் சரமாரியாக தாக்கிக் கொண்டனர். மேலும் ஒரு சிலர் கத்தியால் குத்தியும் தாக்குதல் நடத்தினர். இதனால் அங்கு பெரும் பதற்றமும், பீதியும் உருவானது.



இதையடுத்து அங்கு வந்த கலவர தடுப்பு போலீசார் தடியடி நடத்தி இரு தரப்பையும் கலைக்க முற்பட்டனர். ஆனால் இரு தரப்பை சேர்ந்தவர்கள் போலீசாரையும் சரமாரியாக தாக்கினர்.



இதனைத்தொடர்ந்து போலீசார் ரசாயன திரவத்தை தெளித்தும், தண்ணீரை பீய்ச்சி அடித்தும் போராட்டக்காரர்களை விரட்டியடித்தனர்.



எனினும் இந்த வன்முறையில் போலீசார் உள்பட 8 பேர் பலத்த காயமடைந்தனர். அவர்களில் 2 போலீசார் உள்பட 4 பேருக்கு கத்திக்குத்து காயம் ஏற்பட்டது. அவர்கள் 4 பேரும் உயிருக்கு ஆபத்தான நிலையில் ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.



இதற்கிடையில் இந்த வன்முறை தொடர்பாக 23 பேரை போலீசார் கைது செய்தனர். இந்த வன்முறை காரணமாக வாஷிங்டனில் நீண்ட நேரம் பதற்றம் நிலவியது.



இதற்கிடையில் ‘எலெக்டோரல் காலேஜ்’ எனப்படும் தேர்தல்சபை உறுப்பினர்கள் அமெரிக்காவின் புதிய ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதியை இன்று (திங்கட்கிழமை) அதிகாரபூர்வமாக தேர்வு செய்கிறார்கள்.



இதனை தொடர்ந்து வருகிற ஜனவரி மாதம் 20-ந் தேதி ஜோ பைடன் அமெரிக்காவின் 46-வது ஜனாதிபதியாக பதவி ஏற்கிறார். அவருடன் கமலா ஹாரிசும் பதவி ஏற்பார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை