Skip to main content

பெண்கள் வாக்குகளை பா.ஜ.க-வுக்கு திரட்ட வியூகம்!

Feb 03, 2024 33 views Posted By : YarlSri TV
Image

பெண்கள் வாக்குகளை பா.ஜ.க-வுக்கு திரட்ட வியூகம்! 

மக்களை வடக்கு, தெற்கு என பிரிக்காமல் ஒரு பூங்காவில் உள்ள மலர்களைப் போல நம் அனைவரையும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மூலமாக பாரதிய ஜனதா கட்சி இணைத்தது. பிற கட்சிகள் மக்களை பிரிக்கும் செயல்களை மட்டுமே செய்கிறது- சுனிதா துக்கல்



கோவை சின்னியம்பாளையத்தில் உள்ள திருமண மண்டபத்தில் கோவை பாராளுமன்ற தொகுதிக்கான பா.ஜ.க மகளிர் பிரதிநிதிகள் மாநாடு இன்று (பிப்.3) நடைபெற்றது. இதில் பாஜக தேசிய மகளிர் அணி தலைவர் மற்றும் கோவை தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் மற்றும் ஹரியானா நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கல் ஆகியோர் தலைமை வகித்தனர். இந்த மாநாட்டில், வரும் நாடாளுமன்றத் தேர்தலில் பாஜக மகளிர் அணியின் பணிகள் குறித்து ஆலோசிக்கப்பட்டது.



தொடர்ந்து செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த நாடாளுமன்ற உறுப்பினர் சுனிதா துக்கல் பேசுகையில், "பாஜக தேசிய மகளிர் அணி தலைவி வானதி சீனிவாசன் தலைமையில் கோவையில் இன்று நடைபெற்ற பாஜகவின் மகளிர் பிரிவு மாநாட்டில் பெரும்பாலான மகளிர் கலந்து கொண்டது மகிழ்ச்சி அளிக்கிறது. இது தமிழகத்தில் உள்ள திமுக-வின் குடும்ப ஆட்சி முறையின் மீது பெண்கள் கொண்டிருக்கும் அதிருப்தியை வெளிப்படுத்துகிறது.



பாரதிய ஜனதா கட்சி வரும் நாடாளுமன்ற தேர்தலில் வெற்றி பெறும். 400க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றி பிரதமர் மோடி மீண்டும் பிரதமராக பதவியேற்பார். நாட்டு மக்களை வடக்கு, தெற்கு என பிரிக்காமல் ஒரு பூங்காவில் உள்ள மலர்களைப் போல நம் அனைவரையும் காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி மூலமாக பாரதிய ஜனதா கட்சி இணைத்தது. பிற கட்சிகள் மக்களை பிரிக்கும் செயல்களை மட்டுமே செய்கிறது எனத் தெரிவித்தார்.



இதனை அடுத்து செய்தியாளர்களிடம் பேசிய வானதி சீனிவாசன் கூறியதாவது, நாடாளுமன்ற தேர்தலை கருத்தில் கொண்டு கோவையில் பாஜகவின் மகளிர் பிரதிநிதிகள் மாநாடு நடைபெற்றது. ஹரியானாவின் சிர்சா தொகுதியின் நாடாளுமன்ற உறுப்பினரும், தேசிய செயற்குழு உறுப்பினருமான சுனிதா துக்கல் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார். நாளை நீலகிரி தொகுதியின் மகளிர் மாநாடு நடைபெற உள்ளது. இதுபோல வரும் தேர்தலுக்கு மகளிர் அணியினை தயார் செய்யும் விதமாக பணிகள் நடைபெற்று வருகிறது.



வரும் பாராளுமன்ற தேர்தலில் மகளிர் அதிக அளவில் பாரதிய ஜனதா கட்சிக்கு வாக்களிப்பதை உறுதி செய்வதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறோம். மகளிர் அதிக அளவில் வாக்களிப்பதன் மூலம் அரசியலில் மகளிரின் பங்களிப்பு மேம்படுத்தப்படுவதோடு, அரசியலிலும் சமூகத்திலும் நல்ல மாற்றங்கள் ஏற்படும். வரும் நாடாளுமன்ற தேர்தலில் பாஜக சார்பில் அதிக அளவில் மகளிர் வேட்பாளர்கள் போட்டியிட வேண்டும் என கட்சிக்கு வலியுறுத்தியுள்ளோம். அதற்கான தகுதியான மகளிரை தேர்வு செய்தும் வருகிறோம்.



தமிழ் மாநில காங்கிரஸ் கட்சித் தலைவர் ஜி.கே.வாசன் தற்போது தேசிய ஜனநாயக கூட்டணியில் தான் இருக்கிறார். கட்சி சார்பில் யாரை தூதாக அனுப்புகிறார்கள் என்பது கட்சிக்கு தான் தெரியும். எங்களால் கருத்து கூற முடியாது.



அரசியல் கட்சி ஆரம்பித்துள்ள நடிகர் விஜய்க்கு வாழ்த்துக்கள். மக்களுக்கு பணி செய்வதற்காக அரசியல் களத்திற்கு வருவதாக கூறுகிறார். அவரை வரவேற்கிறோம். நாட்டு மக்களை வடக்கு, தெற்கு என பிரிக்காமல் அனைவரையும் ஒன்றிணைப்பதற்காகவே பாரதிய ஜனதா கட்சி செயல்பட்டு வருகிறது.  கட்சியின் தலைமை தான் வேட்பாளர்கள் குறித்து முடிவு செய்யும்.



மகளிர் அணி மாநாட்டினை தொடர்ந்து கட்சியின் பல்வேறு அணிகளின் மாநாடு அடுத்தடுத்து நடைபெற உள்ளது. மோடி மீண்டும் பிரதமராக வேண்டும் என ஆதரவளிக்கும் அனைத்து கட்சிகளோடும் கூட்டணி வைக்க பாஜக தயாராக உள்ளது. 10 ஆண்டுகள் சிறப்பான ஆட்சியை தந்ததோடு, வரும் நாடாளுமன்ற தேர்தலிலும் பாஜக-விற்கு வெற்றி உறுதியாகி உள்ள நிலையில் எங்களோடு இணைய விரும்பும் தமிழக அரசியல் கட்சி யாராக இருந்தாலும் வரவேற்கிறோம்" எனத் தெரிவித்தார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை