Skip to main content

நடிகர் விஜயகாந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை!

Aug 24, 2023 60 views Posted By : YarlSri TV
Image

நடிகர் விஜயகாந்த் வெளியிட்ட முக்கிய அறிக்கை! 

தனது பிறந்தநாளை முன்னிட்டு தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது:



2005 ஆம் ஆண்டு தேமுதிக தொடங்கப்பட்ட பிறகு 2006 ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வொரு வருடமும் எனது பிறந்தநாளை “வறுமை ஒழிப்பு தினமாக” கடைப்பிடித்து வருகிறேன். தேசிய முற்போக்கு திராவிட கழகத்தின் நிர்வாகிகளும், தொண்டர்களும் என் வழியை பின்பற்றி அவர்களால் முடிந்த அளவிற்கு மக்களுக்கான நல உதவிகளை “இயன்றதைச் செய்வோம், இல்லாதவர்க்கே” என்ற கொள்கை முழக்கத்தோடு தொடர்ந்து, ஒவ்வோரு ஆண்டும் செய்து வருகிறார்கள்.



இதன் மூலம் தமிழ்நாட்டில் உள்ள ஏழை, எளிய மக்கள் பயன்பெற்று, அவர்களின் வறுமையை ஒழிக்கும் முயற்சியில் தே.மு.தி.க. தொடர்ந்து பாடுபட்டு வருகிறது. வறுமை ஒழிப்பு என்பது மக்கள் இயக்கமாக மலர வேண்டும் என்பதே எனது குறிக்கோள்.



மேலும் கடந்த காலங்களில் முதியோர் இல்லங்களுக்கு தலா 1 லட்சம் ரூபாய் வீதம் தமிழ்நாட்டின் அனைத்து மாவட்டங்களுக்கும் 32 லட்சம் ரூபாய், ஈரோடு மற்றும் திருப்பூர் மாவட்டங்களில் 2 கோடியே 75 லட்சம் ரூபாய் மதிப்புள்ள வீட்டு மனை நிலங்கள் இலவசமாகவும், காஞ்சிபுரம் மாவட்டம் மாமண்டூரில் 20 லட்சம் ரூபாய் மதிப்பில் இலவச திருமண மண்டபமும், பெண் சிசுக் கொலையை தடுத்திட “பெண்கள் நாட்டின் கண்கள்” என்ற திட்டத்தின் மூலம் சுமார் 500 பெண் குழந்தைகளுக்கு அவர்களின் திருமண வயதில் தலா இரண்டு லட்சம் ரூபாய் கிடைக்கும் வகையில் 50 லட்சம் ரூபாய் வைப்பு நிதியாகவும் வழங்கி வருகிறோம்.



இதே போன்று லட்சக்கணக்கான மாணவ, மாணவியர் பயன்பெறும் வகையில் 1 கோடியே 50 லட்சம் ரூபாய் மதிப்பில் தமிழகத்தில் 60 இடங்களில், 600 கணினிகள் கொண்ட கேப்டன் இலவச கணினி பயிற்சி மையமும், ஏழைத் தாய்மார்கள் சுயதொழில் செய்வதற்காக 65 லட்சம் ரூபாய் மதிப்பில் 1300 தையல் இயந்திரங்களும், ஏழை சகோதரிகளின் திருமணத்திற்கு உதவிகளும், மாற்றுத் திறனாளிகளுக்கு மூன்று சக்கர சைக்கிள்களும், காது கேட்கும் கருவிகளும், சலவைத் தொழிலாளர்களுக்கு சலவை பெட்டிகளும், மாணவ, மாணவிகளுக்கு கல்விக் கட்டணங்களும், பள்ளிக் குழந்தைகளுக்கு சீருடைகளும், நோட்டுப் புத்தகங்களும் வழங்கிவருகிறோம். இந்த உதவிகளை பெற்று படித்து, பட்டம் பெற்று பலரும் பல்வேறு உயர்பதவிகளில் இருக்கிறார்கள்.



தமிழ்நாடு முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகளில் சுமார் 100 பேரை தேர்வு செய்து, அவர்களுக்கு பயன்படும் வகையில் மாவட்ட நிர்வாகிகள் மற்றும் தொண்டர்களின் ஆதரவுடன் சுமார் 65 லட்சம் ரூபாய் மதிப்பிலான நான்கு சக்கரம் பொருத்திய மோட்டார் சைக்கிள் (TVS Scooty) வாகனங்களையும், தமிழகம் முழுவதும் வறுமை நிலையில் உள்ள சுமார் ஆயிரம் (1000) நலிவுற்ற குடும்பங்களை தேர்வு செய்து ஒவ்வொரு குடும்பத்திற்கும் தலாபத்தாயிரம் (10,000) வீதம் சுமார் ஒருகோடி ரூபாயும் வழங்கி உள்ளோம்.



இதே போன்று செம்மரக்கட்டை வெட்டியதாக ஆந்திரா வன பகுதியில் 20 தமிழர்கள் சுட்டு கொல்லபட்டனர். அவர்கள் குடும்பங்களை நேரில் சந்தித்து 10 லட்சம் ரூபாய்யும், 2015 ஆம் ஆண்டு ஆகஸ்ட் முதல் நவம்பர் வரை “மக்களுக்காக மக்கள் பணி” என்ற திட்டத்தின் மூலம் ஏற்கனவே 2012ஆம் ஆண்டில் செய்ததைப்போல தமிழ்நாட்டில் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 20 லட்சம் ரூபாய்க்கும் அதிகமாக நல உதவிகளை ஏழை, எளிய மக்களுக்கு வழங்கி உள்ளோம்.



மேலும் புரட்சித் தலைவர் எம்.ஜி.ஆர். காது கேளாதோர் பள்ளிக்கு ஆண்டுதோறும் வழங்குவது போல், மதிய உணவு மற்றும் நிதியுதவியாக 50 ஆயிரம் ரூபாய் இந்த ஆண்டும் வழங்கப்படும். இதுபோன்று நமது கழக கொடியை அனைத்து இடங்களிலும் ஏற்றி நலத்திட்டங்களை கழக நிர்வாகிகளும், கழகத்தொண்டர்களும் ஏழை, எளிய மக்களுக்கு இந்த வறுமை ஒழிப்புதினத்தில் செய்யவேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



தமிழக மக்கள் மனதில் நாம் நீங்கா இடம்பிடித்துள்ளோம். என் மீது அன்புகொண்ட தமிழக மக்களுக்கும், தாய்மார்களுக்கும், தேமுதிக நிர்வாகிகளுக்கும், தொண்டர்களுக்கும் என்றென்றும் நான் கடமைப்பட்டுள்ளேன். அதே நேரத்தில் தமிழக மக்கள் தங்கள் நல்ஆதரவையும், ஒத்துழைப்பையும் வருகின்ற பாராளுமன்ற தேர்தலில் தொடர்ந்து வழங்கிட வேண்டுமென கேட்டுக்கொள்கிறேன்.



குறிப்பு: என்னுடைய உடல்நலம் குறித்த வந்ததிகளை யாரும் நம்பவேண்டாம். நான் நலமுடன் இருக்கிறேன். கோயம்பேட்டில் உள்ள தலைமை கழகத்தில் எனது பிறந்தநாளில் 25.08.2023 காலை 10 மணிக்கு கழக நிர்வாகிகளையும், கழக தொண்டர்களையும் நேரில் சந்திக்கவுள்ளேன். என்னை சந்திக்க வரும் கழக தொண்டர்கள் யாரும் பொக்கே, சால்வை, மாலை, போன்ற அன்பளிப்புகளை தவிர்க்க வேண்டுமென அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்.



இவ்வாறு தனது அறிக்கையில் தேமுதிக பொதுச்செயலாளர் விஜயகாந்த் தெரிவித்துள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை