புதுச்சேரியில் விடுதியில் போதைப் பொருள்!

புதுச்சேரி, செட் டித்தெருவில் உள்ள அண்ணா சாலை சந்திப்பில் அமைந்துள்ள விடுதியில் போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாகக் கிடைத்த ரகசியத் தகவலின் பேரில், போலீசார் அதிரடிச் சோதனை நடத்தி உயர்ரக போதைப்பொருளுடன் ஒருவரைக் கைது செய்தனர்.
போதைப்பொருள் விற்பனை குறித்த தகவல் கிடைத்ததைத் தொடர்ந்து, பெரியக்கடை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீஸார் சம்பந்தப்பட்ட விடுதியில் அதிரடியாகச் சோதனை மேற்கொண்டனர். அப்போது, அங்குள்ள ஒரு அறையில் போதை மயக்கத்தில் ஒரு இளைஞர் தங்கியிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அந்த இளைஞரிடம் போலீஸார் நடத்திய விசாரணையில், அவர் திருவண்ணாமலை மாவட்டம், ஆரணி இருமேடு கிராமத்தைச் சேர்ந்த கண்ணன் (வயது 40) என்பது தெரியவந்தது.
அவரைச் சோதனை செய்தபோது, சிறு சிறு பாக்கெட்டுகளில் 39 கிராம் மெத்தபெட்டமைன் (Methamphetamine) என்ற உயர்ரக போதைப் பொருளும், 23 சிரிஞ்சி ஊசிகளும் அவரிடமிருந்து கைப்பற்றப்பட்டன. கைப்பற்றப்பட்ட இந்த போதைப் பொருளின் மதிப்பு சுமார் ரூ.2 லட்சம் இருக்கும் எனக் கூறப்படுகிறது. விசாரணையில், கண்ணன் சுற்றுலாப் பயணிகளுக்கு விற்பனை செய்வதற்காக இந்த போதைப் பொருட்களை வைத்திருந்தது தெரியவந்தது.
இதையடுத்து, கண்ணனை கைது செய்த போலீஸார், அவரிடமிருந்த போதைப் பொருட்களைப் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த போதைப் பொருட்களை அவர் மொத்தமாக எங்கிருந்து வாங்கி வந்தார் என்பது குறித்துப் பெரியக்கடை போலீஸார் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.







