Skip to main content

உக்ரைன் தலைநகரை கைப்பற்ற முடியாமல் திணறும் ரஷிய படைகள்; காரணம் இதுதான்!

Mar 13, 2022 86 views Posted By : YarlSri TV
Image

உக்ரைன் தலைநகரை கைப்பற்ற முடியாமல் திணறும் ரஷிய படைகள்; காரணம் இதுதான்! 

இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற முடியாமல் ரஷிய படைகள் திணறி வருகின்றன.



உக்ரைன் மீது ரஷியா கடந்த பிப்ரவரி 24 ஆம் திகதி தாக்குதலை தொடங்கியது. அந்நாட்டின் தலைநகரை கைப்பற்றும் நோக்கில் ரஷிய படைகள் முன்னேறி வருகின்றன. இதற்கு உக்ரைன் பாதுகாப்பு படை பலத்த எதிர்வினையாற்றி வருகிறது.



இந்த போரில் இரு தரப்பிலும் அதிக உயிர்சேதங்கள் ஏற்பட்டுள்ளன. போரை முடிவுக்குக் கொண்டுவர இரு நாடுகளின் உயர் அதிகாரிகள் நடத்திய பல கட்ட பேச்சுவார்த்தைகளும் தோல்வியில் முடிந்த நிலையில், ஒரு சில பகுதிகளில் தற்காலிக போர் நிறுத்தம் அறிவிக்கப்பட்டாலும், பெரும்பாலான இடங்களில் ரஷியா தனது தாக்குதலை தொடர்ந்து வருகிறது.



உக்ரைன் மீது ரஷியா படையெடுத்த போது, ஓரிரு நாட்களில் ரஷியாவிடம் உக்ரைன் வீழ்ந்துவிடும் என்றே எதிர்பார்க்கப்பட்டு வந்தது. ஆனால் இரண்டு வாரங்களைக் கடந்தும் உக்ரைன் தலைநகரை கைப்பற்ற முடியாமல் ரஷிய படைகள் திணறி வருகின்றன. ரஷியாவின் ராணுவம் மற்றும் விமானப்படை இடையே போதுமான ஒத்துழைப்பு இல்லாதது இதற்கு ஒரு காரணமாக கூறப்படுகிறது.



அதே சமயம் உக்ரைன் குறித்து ரஷியா தப்புக்கணக்கு போட்டுவிட்டதாகவும், ‘ஆழம் தெரியாமல் காலை விட்டுவிட்டார் புதின்’ என்றும் சமூக வலைதளங்களில் பலர் விமர்சித்து வருகின்றனர். நெப்போலியன், ஹிட்லர் ஆகியோருக்கு நேர்ந்த அதே கதிதான் புதினுக்கும் நேர்ந்துள்ளதாகவும் சிலர் கூறுகின்றனர்.



இதற்கு காரணம் உக்ரைனை காக்கும் அரணாக தற்போது விளங்கி வரும் ‘ரஸ்புதிட்சா’ எனப்படும் பருவநிலை தான். ‘ரஸ்புதிட்சா’ என்பது உக்ரைன் மக்களையே மிகுந்த சிரமத்திற்கு உள்ளாக்கும் ஒருவகை வானிலை சீசன் ஆகும். இந்த காலத்தில் ஏற்படும் அதிக மழை மற்றும் பனி காரணமாக சாலை போக்குவரத்து மிகுந்த கடினமானதாக மாறிவிடுகிறது.



இதனால் தற்போது ரஷியாவின் ராணுவ படை மற்றும் பீரங்கிகள் முன்னேற முடியாமல் திணறி வருகின்றன. சில இடங்களில் ராணுவ பீரங்கிகளை விடுத்து ரஷிய வீரர்கள் நடந்தே செல்லும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது ரஷிய படைகளுக்கு ஏற்பட்டுள்ள புதிய சவாலாகவும், மிகப்பெரிய சறுக்கலாகவும் பார்க்கப்படுகிறது.



இது மட்டுமல்லாது உக்ரைனில் ரஷிய படைகளுக்கு தேவையான எரிசக்தி மற்றும் தண்ணீருக்கும் பெரும் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளது. தற்போது துவங்கியிருக்கும் இந்த வானிலை இன்னும் 2 அல்லது 3 வாரங்களுக்கு தொடரும் என்பதால், தற்போதாவது சுதாரித்துக் கொண்டு புதின் தனது படைகளை பின்வாங்க உத்தரவிடுவாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.



உக்ரைனில் இருந்து திரும்பிய இந்திய மாணவர்களும், அங்கு நிலவிய மோசமான வானிலை குறித்து தெரிவித்திருந்தனர். கடந்த 1812 ஆம் ஆண்டு பிரான்ஸ் மன்னர் நெப்போலியனின் படைகள் பின்வாங்கவும், 1943 ஆம் ஆண்டு ஹிட்லரின் நாஜி படைகள் ரஷியாவிடம் வீழ்ந்ததற்கும் இந்த மோசமான வானிலை தான் காரணம் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை