Skip to main content

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை!

Sep 05, 2021 108 views Posted By : YarlSri TV
Image

9 மாவட்ட உள்ளாட்சி தேர்தல்- தி.மு.க. நிர்வாகிகளுடன் மு.க.ஸ்டாலின் ஆலோசனை! 

தமிழகத்தில் புதிதாக உருவாக்கப்பட்ட 9 மாவட்டங்களுக்கும் உள்ளாட்சி தேர்தலை இந்த மாதம் 15-ந்தேதிக்குள் நடத்த வேண்டும் என்று சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டு இருந்தது.



தேர்தல் நடத்துவதற்கான ஏற்பாடுகளில் ஈடுபட்டு வந்த மாநில தேர்தல் ஆணையம் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலை நடத்த கால அவகாசம் கோரி உள்ளது.



புதிதாக உருவாக்கப்பட்ட மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி பகுதிகளின் வார்டு வரையறை தொடர்பான பணிகள் இன்னும் முழுமை அடையாததால் வருகிற டிசம்பர் மாதத்துக்குள் உள்ளாட்சி தேர்தலை நடத்தி முடிக்க முதலில் திட்டமிட்டிருந்தது.



ஆனால் ஊரக உள்ளாட்சி தேர்தலை உடனடியாக நடத்த மாநில தேர்தல் ஆணையம் தற்போது முடிவு செய்துள்ளது. அதன்படி ஊரக வார்டு உறுப்பினர்கள், ஊராட்சி தலைவர்கள், ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்களுக்கான தேர்தல் நடைபெற உள்ளது.



தேர்தல் நடத்துவது தொடர்பாக அங்கீகரிக்கப்பட்ட அனைத்து கட்சிகளுடனும் மாநில தேர்தல் ஆணையர் நாளை ஆலோசனை நடத்த உள்ளார்.



சட்டசபை கூட்டம் வருகிற 13-ந்தேதி முடிகிறது. உடனடியாக தேர்தல் தேதியும் வெளியாக வாய்ப்புள்ளது.

 



இதன்மூலம் 15-ந் தேதிக்குள் தேர்தல் நடத்த வேண்டும் என்ற சுப்ரீம் கோர்ட்டின் உத்தரவை நடைமுறைபடுத்தியதாகவும் ஆகிவிடும் என்று மாநில தேர்தல் ஆணையம் கருதுகிறது.



இந்த நிலையில் அரசியல் கட்சிகளும் தேர்தலை சந்திக்க தயாராகி வருகின்றன. அ.தி.மு.க. சார்பில் 9 மாவட்டங்களுக்கும் தேர்தல் பணிக்குழு போடப்பட்டுள்ளது.



இந்த குழுவில் முன்னாள் அமைச்சர்கள் பா.வளர்மதி, திண்டுக்கல் சீனிவாசன், தங்கமணி, காமராஜ், பெஞ்சமின், சோமசுந்தரம் உட்பட பலர் இடம்பெற்றுள்ளனர். இதற்கான அறிவிப்பை கட்சியின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் வெளியிட்டுள்ளனர்.



காங்கிரஸ் சார்பிலும் தேர்தலில் போட்டியிட விரும்புபவர்கள் பெயர் பட்டியலை தயாரிக்கும்படி மாவட்ட தலைவர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.



தி.மு.க. தலைவரும், முதல்-அமைச்சருமான மு.க.ஸ்டாலின் சென்னை அண்ணா அறிவாலயத்தில் இன்று 9 மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



இந்த கூட்டத்தில் காஞ்சிபுரம், செங்கல்பட்டு, விழுப்புரம், கள்ளக்குறிச்சி, வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், திருநெல்வேலி, தென்காசி ஆகிய 9 மாவட்ட செயலாளர்கள் அந்த மாவட்டங்களில் உள்ள ஒன்றிய செயலாளர்கள், கிளை கழக நிர்வாகிகள், அந்த மாவட்டங்களை சேர்ந்த அமைச்சர்களான துரைமுருகன், மா.சுப்பிரமணியன், த.மோ.அன்பரசன், பொன்முடி, எ.வ.வேலு, காந்தி மற்றும் எம்.எல்.ஏ.க்களும் கலந்துகொள்கிறார்கள்.



கூட்டத்தில் உள்ளாட்சி தேர்தலை சந்திப்பது, கட்சி நிர்வாகிகள் தேர்தல் பணியாற்றுவது, தகுதியான வேட்பாளர்களை அடையாளம் காண்பது பற்றி நிர்வாகிகளுக்கு மு.க.ஸ்டாலின் ஆலோசனை வழங்குகிறார்.



ஊரக பகுதிகளில் நாம் தமிழர் கட்சிக்கு இளைஞர்கள் மத்தியில் செல்வாக்கு இருக்கிறது. எனவே உள்ளாட்சி தேர்தலில் கட்சியை வலுப்படுத்தும் வகையில் பல இடங்களை கைப்பற்ற தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்.



கடந்த 2 நாட்களாக ராணிப்பேட்டை, வேலூர், திருப்பத்தூர் ஆகிய மாவட்ட நிர்வாகிகளுடன் கலந்தாய்வு நடந்தது. இன்று விழுப்புரம், கள்ளக்குறிச்சி மாவட்ட நிர்வாகிகளுடன் சீமான் ஆலோசனை நடத்துகிறார்.



பா.ஜனதாவில் முன்னாள் மத்திய மந்திரி பொன்.ராதாகிருஷ்ணன் தலைமையில் மாநில தலைவர் அண்ணாமலை, அமைப்பு செயலாளர் கேசவ விநாயகம் ஆகியோர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது.



இந்த குழுவின் முதல் கூட்டம் நேற்று நடந்தது. இன்று முதல் போட்டியிட விரும்புபவர்களிடம் அந்தந்த மாவட்டங்களில் மனு வாங்கப்படுகிறது. மனுகொடுக்க 7-ந்தேதி கடைசி நாள். பின்னர் மனுக்கள் அடங்கிய பட்டியலை தயார் செய்து கட்சி தலைமைக்கு அனுப்பும் படி கேட்டுக்கொண்டுள்ளனர்.

 



உள்ளாட்சி தேர்தலை பொறுத்தவரை கட்சிகளுக்கு அப்பாற்பட்டு தனிப்பட்ட செல்வாக்கும் முக்கிய பங்கு வகிக்கும். எனவே உள்ளூர் செல்வாக்கு பெற்றவர்களும் தேர்தல் களத்துக்கு தயாராகி வருகிறார்கள்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை