Skip to main content

வவுனியாவில் காணிகளைத் துப்பரவு செய்த ஊடகவியலாளர்கள் பொலிசாரால் விசாரணை!

Jul 26, 2021 165 views Posted By : YarlSri TV
Image

வவுனியாவில் காணிகளைத் துப்பரவு செய்த ஊடகவியலாளர்கள் பொலிசாரால் விசாரணை! 

வவுனியா ஓமந்தை பகுதியில் வவுனியா பிரதேச ஊடகவியலாளர்களுக்கு வழங்குவதற்கென அடையாளம் காட்டப்பட்டிருந்த காணிகளில் காணப்பட்ட பாதீனியம் மற்றும் முட்செடிகளை அகற்றி சுத்தம் செய்த ஊடகவியலாளரிடம் ஓமந்தை பொலிசார் பொலிஸ் நிலையம் அழைத்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.



வவுனியா, ஓமந்தை, வேப்பங்குளம் அரச வீட்டுத்திட்டத்திற்கு அருகாமையில் வவுனியா பிராந்திய தமிழ் ஊடகவியலாளர்களுக்கு அரசாங்கத்தின் வீட்டுத் திட்டம் வழங்குவதற்காக 2018 ஆம் ஆண்டு அப்போதைய பிரதேச செயலாளரால் காணி ஒதுக்கீடு செய்யப்பட்டிருந்தது.



குறித்த காணியை ஊடகவியலாளருக்கு தேசிய வீடமைப்பு அதிகார சபை ஊடாக வீட்டு திட்டம் வழங்க வழங்குவதற்காக நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தேசிய வீடமைப்பு அதிகார சபைக்கும், ஊடகவியலாளருக்கும் பிரதேச செயலாளரால் கடிதம் வழங்கப்பட்டது.



வனவளத் திணைக்களத்திடம் இருந்து குறித்த காணியை ஊடகவியலாளர்களின் வீட்டுதிட்டத்திற்காக விடுவிக்குமாறும் பிரதேச செயலாளரால் கடிதம் மூலம் தெரிவிக்கப்பட்டிருந்தது.



அதன்படி குறித்த காணியை வனவளத் திணைக்களத்திடம் இருந்து விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்குமாறு வவுனியா ஊடகவியலாளர் சங்கத்தினர் ஜனாதிபதி செயலகம், காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு, வனவள பாதுகாப்பு அமைச்சு, வனவள ஆணையாளர் நாயகம் ஆகியோரிடம் கடிதம் மூலம் கோரியிருந்தனர்.



அதற்கமைவாக காணி மற்றும் பாராளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சு மற்றும் ஜனாதிபதி செயலகம் என்பவற்றில் இருந்து காணிகளை விடுவித்து ஊடகவியலாளருக்கு வழங்குமாறு தெரிவிக்கப்பட்டிருந்தது.



அதற்கமைவாக வனவளத் திணைக்களத்தின் அனுமதியுடன் ஊடகவியலாளர்கள் குறித்த பகுதியில் இருந்த காடுகளை 2018 ஆம் ஆண்டு துப்பரவு செய்து அதன் பின் தமது காணிகளுக்கான கம்பி கட்டைகளை இட்டு சுத்தம் செய்து பராமரித்தனர்.



தேசிய வீடமைப்பு அதிகார சபையின் வீடமைப்பு திட்டம் வழங்குவதற்காக அப்போதைய அமைச்சரால் அடிக்கல் நாட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டிருந்தது.



இதன்போது, நாட்டில் ஏற்பட்ட அரசியல் குழப்ப நிலை காரணமாக வீட்டுதிட்டத்திற்கான அடிக்கல் நாட்டும் நடவடிக்கைகள் இடம்பெறவில்லை.



இந்நிலையில் வவுனியா பிரதேச செயலாளர் மாற்றம் பெற்று புதிய பிரதேச செயலாளராக நா.கமலதாசன் அவர்கள் பதவியேற்ற பின்னர் குறித்த காணிகளை ஊடகவியலாளருக்கு வழங்க முடியாது என தொடர்ச்சியாக தெரிவித்து வருகின்றார்.



ஆனால் ஊடகவியலாளர்கள் ஒவ்வொருவரும் பெருமளவு பணத்தை செலவு செய்து காணிகளை சுத்தம் செய்து வேலிகள் இட்டபின் பிரதேச செயலாளர் இவ்வாறு நடந்து கொள்வது தவறு எனவும் தமது காணிகளை விடுவிக்குமாறும் பிரதேச மற்றும் மாவட்ட அபிவிருத்திக் குழுக் கூட்டங்களில் கோரியிருந்தனர்.



இதன்போது அங்குள்ள அதிகாரிகள் சிலரும், பாராளுமன்ற உறுப்பினர்களும் குறித்த காணியை ஊடகவியலாளருக்கு வழங்கலாம் என கூறிய போதும் ஒருங்கிணைப்பு குழுக் கூட்டங்களில் பேசப்பட்ட பல விடயங்களை தவிர்ந்து காணி வழங்குவதற்கு எதிர்ப்பு தெரிவிக்கப்படும் கருத்துக்களை முதன்மைப்படுத்தி கூட்ட அறிக்கைகள் எழுதப்பட்டு குறித்த காணியை வழங்குவதற்கு முட்டுக்கட்டைகள் போடப்பட்டு வருகின்றது.



குறித்த காணியினை விடுவிக்குமாறு பிரதேச செயலாளர் நா.கமலதாசன் அவர்களிம் ஊடகவியலாளர்கள் எழுத்து மூலம் கோரியபோதும், இதுவரை அதற்கான பதில் கிடைக்கவில்லை.



இந்நிலையிலேயே ஊடகவியலாளர்கள் தாம் பணம் கொடுத்து துப்பரவு செய்த காணிகளுக்குள் வளர்ந்துள்ள பாதீனியம் மற்றும் பற்றைகளை அகற்றி சுத்தம் செய்த போது அங்கு வந்த அப் பகுதி கிராம அலுவலர் வேலைகளை செய்ய வேண்டாம் எனக் கூறியதுடன், பிரதேச செயலாளரின் அறிவுறுத்தலின் பேரில் ஓமந்தை பொலிசில் முறைப்பாடு செய்தார்.



முறைப்பாட்டுக்கு அமைவாக குறித்த காணிக்கு வருகை தந்த பொலிசார் ஊடகவியலாளர்களை பொலிஸ் நிலையம் அழைத்து வாக்குமூலத்தை பதிவு செய்ததுடன், பிரதேச செயலாளரை எதிர்வரும் செவ்வாய்கிழமை சந்தித்து விட்டு காணி தொடர்பில் நடவடிக்கை எடுக்குமாறு அறிவுறுத்தி ஊடகவியலாளரை அனுப்பியிருந்தனர்.



கடந்த 2018 ஆம் ஆண்டு தமக்கு வழங்குப்பட்ட காணியை மீள கையகப்படுத்த பிரதேச செயலாளர் எடுக்கும் முயற்சி தொடர்பில் ஊடகவியலாளர் அதிருப்தி வெளியிட்டுள்ளதுடன், இது தொடர்பில் மாவட்ட அபிவிருத்தி குழுத் தலைவர் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஆகியோருக்கு தெரிந்தும் மௌனம் காப்பது குறித்தும் ஊடகவியலாளர்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.



 


Categories: இலங்கை
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை