Skip to main content

வேகமெடுக்கும் கொரோனா தொற்று- 6 மாவட்டங்களில் நோய் பரவலை தடுக்க தீவிரம்!

May 28, 2021 181 views Posted By : YarlSri TV
Image

வேகமெடுக்கும் கொரோனா தொற்று- 6 மாவட்டங்களில் நோய் பரவலை தடுக்க தீவிரம்! 

கொரோனா தொற்றின் 2-வது அலை கடந்த மார்ச் மாத இறுதியில் தமிழகத்தில் கால் பதித்தது. அன்று முதல் இன்று வரை தொற்றின் அலை நகர் பகுதி முதல் கிராம பகுதி வரை மின்னல் வேகத்தில் பரவி வருகிறது.



இதனை தடுக்க தமிழக அரசு பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அரசின் நடவடிக்கை காரணமாக சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் பாதிப்பு குறைய தொடங்கியுள்ளது.



இருந்த போதிலும் சென்னையை தவிர பிற மாவட்டங்களில் தொற்று பாதிப்பு தொடர்ந்து அதிகரித்து வருகிறது. குறிப்பாக கோவை, திருப்பூர், ஈரோடு, மதுரை, திருச்சி, சேலம் உள்ளிட்ட 6 மாவட்டங்களில் தொற்று பரவலின் விகிதம் தொடர்ந்து அதிகரித்த வண்ணமே உள்ளது.



இந்த நிலையில் இந்த 6 மாவட்டங்களிலும் கொரோனா நோய் தடுப்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் 6 மாவட்ட கலெக்டர்களுடன் நேற்று ஆலோசனை நடத்தினார்.



கூட்டத்தில், குறிப்பிட்ட 6 மாவட்டங்களில் கொரோனா தொற்றின் தாக்கம் போதிய அளவு கட்டுப்படுத்தப்படாத சூழல் உள்ளது. எனவே இந்த மாவட்டங்களில் தொற்றை கட்டுப்படுத்தவும், இறப்புகளை குறைக்கவும் தேவையான அனைத்து முயற்சிகளையும் மேற்கொண்டு தொற்றை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கலெக்டர்களுக்கு மு.க. ஸ்டாலின் உத்தரவிட்டார்.



மேலும் இந்த 6 மாவட்டங்களுக்கும் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த ஐ.பி.எஸ். அதிகாரிகளை நியமித்தும் முதல்- அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.



கோவை மாவட்டத்தில் கடந்த 2 நாட்களாக தொற்று பாதிப்பு 5 ஆயிரத்தை நெருங்கி கொண்டிருக்கிறது. நேற்று முன்தினம் தொற்று பாதிப்பில் சென்னையை பின்னுக்கு தள்ளி முதலிடத்தை கோவை மாவட்டம் பிடித்தது. இந்த நிலையில் நேற்று இதுவரை இல்லாத புதிய உச்சமாக 4 ஆயிரத்து 734 பேருக்கு தொற்று உறுதியாகி 2-வது நாளாக மாவட்டத்தில் முதலிடத்தை பிடித்துள்ளது. சென்னையை விட கோவையில் பாதிப்பு இருமடங்காக அதிகரித்துள்ளது. இதுவரை மாவட்டம் முழுவதும் 1 லட்சத்து 55 ஆயிரத்து 820 பேர் தொற்றால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதனை தடுக்க மாவட்ட நிர்வாகம் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளை தீவிரமாக கண்காணிக்கின்றனர். அங்குள்ளவர்கள் வெளியே வர தடை விதித்துள்ளது. மேலும் மாவட்டத்தில் கொரோனா பரிசோதனையும் தற்போது அதிகப்படுத்தப்பட்டுள்ளது.



கோவை மாவட்டத்தில் கொரோனா தொற்றை கண்காணிக்க நியமிக்கப்பட்ட தொற்று தடுப்பு கண்காணிப்பு அலுவலரும், வணிகவரித் துறை ஆணையருமான எம்.ஏ. சித்திக் நேற்று கோவை மாநகராட்சி பகுதிகளுக்கு உட்பட்ட மத்திய மண்டலம், மேற்கு மண்டலங்களில் ஆய்வு செய்தார்.



காந்திபுரம் பஸ் நிலையத்தில் ஆய்வு மேற்கொண்ட அவர் சுகாதார பணியாளர்கள் வீடு, வீடாக சென்று பொதுமக்களுக்கு பல்ஸ் ஆக்சி மீட்டர் மூலம் ஆக்சிஜன் அளவினை கண்டறியும் முறைகள் குறித்தும், தெர்மோ மீட்டர் மூலம் வெப்ப அளவினை கண்டறியும் முறைகள் குறித்தும் அறிவுரைகள் வழங்கினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை