Skip to main content

தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல் - 14 பேர் படுகாயம்!

Mar 29, 2021 143 views Posted By : YarlSri TV
Image

தேவாலயத்தில் தற்கொலை படை தாக்குதல் - 14 பேர் படுகாயம்! 

இந்தோனேஷியாவின் கிழக்கு பகுதியில் அமைந்துள்ள துறைமுக நகரமான மக்காசர் நகரில் கத்தோலிக்க தேவாலயம் ஒன்று உள்ளது.‌ ஞாயிற்றுக்கிழமை சிறப்பு பிரார்த்தனைக்காக நேற்று இந்த தேவாலயத்தில் ஏராளமான கிறிஸ்தவர்கள் குழுமியிருந்தனர். உள்ளூர் நேரப்படி காலை 10.30 மணிக்கு பிரார்த்தனை முடியும் தருவாயில் இருந்தபோது, மோட்டார் சைக்கிளில் வந்த 2 பேர் தேவாலயத்துக்குள் நுழைய முற்பட்டனர்.



ஆனால் அவர்கள் மீது சந்தேகமடைந்த தேவாலய ஊழியர்கள் அவர்களை நுழைவாயிலிலேயே நிறுத்தி விசாரித்தனர்.



அப்போது அவர்கள் இருவரும் தங்கள் உடலில் கட்டிக்கொண்டு வந்திருந்த வெடிகுண்டுகளை வெடிக்கச் செய்தனர். அவை பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறின.‌ இதில் அந்த பகுதியே அதிர்ந்தது.‌ தேவாலயத்திற்குள் இருந்த அனைவரும் கடுமையாக பீதியடைந்தனர்.



இந்த குண்டு வெடிப்பில் தற்கொலை படை பயங்கரவாதிகள் 2 பேரும் சம்பவ இடத்திலேயே உடல் சிதறி பலியாகினர். மேலும் தேவாலய ஊழியர்கள் உள்பட 14 பேர் இந்த குண்டுவெடிப்பில் பலத்த காயமடைந்தனர்.



இந்த குண்டுவெடிப்பு குறித்த தகவல் கிடைத்ததும் பாதுகாப்பு படை வீரர்கள் உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர். அவர்கள் தேவாலயத்தை சுற்றி வளைத்து தங்களின் பாதுகாப்பு வளையத்துக்குள் கொண்டு வந்தனர். அதன் பின்னர் படுகாயம் அடைந்தவர்களை மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.‌ அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



இந்த தாக்குதலுக்கு உடனடியாக எந்த ஒரு பயங்கரவாத அமைப்பும் பொறுப்பேற்காத நிலையில் இதன் பின்னணி குறித்து போலீசார் தீவிரமாக விசாரித்து வருகின்றனர்.



இதனிடையே தேவாலயத்தில் நடத்தப்பட்ட குண்டு வெடிப்புக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ள அந்த நாட்டின் மத விவகாரங்களுக்கான மந்திரி யாகுத் சோலில் கவ்மாஸ், வழிபாட்டு தலங்களில் பாதுகாப்பை பலப்படுத்தும் படி போலீசாரை கேட்டுக்கொண்டுள்ளார்.


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை