Skip to main content

தமிழர் நலன் குறித்து பேச ராகுல் காந்திக்கு அருகதை கிடையாது- எல்.முருகன் !

Jan 24, 2021 198 views Posted By : YarlSri TV
Image

தமிழர் நலன் குறித்து பேச ராகுல் காந்திக்கு அருகதை கிடையாது- எல்.முருகன் ! 

தமிழர் நலன் குறித்து பேச ராகுல்காந்திக்கு அருகதை கிடையாது என தமிழக பா.ஜ.க.தலைவர் எல்.முருகன் தெரிவித்துள்ளார்.



நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் 125-வது பிறந்தநாளையொட்டி, சென்னை தியாகராய நகரிலுள்ள பா.ஜ.க. அலுவலகமான கமலாலயத்தில் அவருடைய உருவப்படத்துக்கு மரியாதை செலுத்தும் நிகழ்ச்சி நேற்று (சனிக்கிழமை) நடைபெற்றது.



குறித்த நிகழ்வினை தொடர்ந்து நடைபெற்ற ஊடகவவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.



இதன்போது அவர் மேலும் கூறியுள்ளதாவது, “சட்டமன்ற தேர்தலையொட்டி, தமிழக பா.ஜ.க.வின் பூத் கமிட்டிகளை வலுப்படுத்தும் பணி நடைபெற்று வருகிறது. ஒவ்வொரு பூத்துக்கும் 30 பேர் கொண்ட கமிட்டி அமைக்கும் பணி 80 சதவீதம் முடிந்துவிட்டது.



நானும், தமிழக பா.ஜ.க. பொறுப்பாளருமான சி.டி.ரவியும் விரதம் இருந்து எதிர்வருகின்ற 27ஆம் திகதி பழனியில் காவடி ஏந்தி, வழிபட இருக்கிறோம். எங்களின் வேண்டுகோளை ஏற்று தைப்பூசத்துக்கு அரசு விடுமுறை அறிவித்ததற்காக தமிழக முதலமைச்சருக்கு நன்றி தெரிவித்து கொள்கிறோம்.



இதேவேளை இந்தியாவில் இருந்தே காங்கிரஸ் துரத்தப்பட்டு வருகிறது. தமிழகத்திலும் எங்கும் வரமுடியாது. ஒரு இடத்தில் கூட காங்கிரசால் தனித்து போட்டியிடமுடியாது.



மேலும் ராகுல்காந்திக்கு தமிழ் பற்றி என்ன தெரியும்? ஒரு திருக்குறளை உச்சரிக்க முடியுமா? இலங்கையில் தமிழர்கள் கொன்று குவிக்கப்பட்டதற்கு காரணமே காங்கிரசும், தி.மு.க.வும் தான்.



எனவே ராகுல்காந்தி, மு.க.ஸ்டாலின் போன்றவர்களுக்கு தமிழர் நலன் பற்றி பேச எந்த அருகதையும்இ தகுதியும் கிடையாது” என அவர் குறிப்பிட்டுள்ளார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை