Skip to main content

கொரோனா தொற்று குறைந்த பிறகே, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி

Sep 12, 2020 222 views Posted By : YarlSri TV
Image

கொரோனா தொற்று குறைந்த பிறகே, மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கப்படும் - எடப்பாடி பழனிசாமி 

காஞ்சிபுரம் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில், முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில், காஞ்சிபுரம் மற்றும் செங்கல்பட்டு மாவட்டங்களில் மேற்கொள்ளப்பட்டு வரும் கொரோனா தடுப்பு பணிகள் குறித்தும், மாவட்ட வளர்ச்சித் திட்ட பணிகள் குறித்தும் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு பிறகு எடப்பாடி பழனிசாமி சிறு, குறு தொழிற்சாலை பிரதிநிதிகள், விவசாய பிரதிநிதிகள் மற்றும் சுயஉதவி குழு பிரதிநிதிகளுடன் ஆலோசனை நடத்தினார்.



அதைத் தொடர்ந்து முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-



மாநில அரசு கொரோனாவை தடுப்பதற்கான முயற்சிகளை எடுத்து வருகிறது. நோய் தொற்று இருக்கும் இடங்களில் நடமாடும் மருத்துவ குழு அந்த பகுதிக்கே சென்று அங்குள்ள மக்களை பரிசோதனைக்கு உட்படுத்தி அறிகுறி இருந்தால் ஆர்.டி.பி.சி.ஆர். பரிசோதனை செய்து அதில் நோய் தொற்று கண்டறியப்பட்டால் சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.



கொரோனா தொற்று படிப்படியாக குறைந்து வருகிறது. இந்த நோய் தொற்று குறைய தொடங்கி இருக்கிறது. இது நல்லமுறையில் குறைந்தால் மாநிலங்களுக்கு இடையிலான போக்குவரத்து தொடங்கும்.



மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு இணையாக காஞ்சிபுரம் மருத்துவமனையில் அனைத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளது. இருப்பினும், அனைத்து மருத்துவமனைகளிலும் மருத்துவ கல்லூரி அமைப்பது தான் அரசின் எண்ணம். தமிழகத்தில் 11 மருத்துவ கல்லூரிகள் மருத்துவமனைகளில் தொடங்கப்பட்டுள்ளது. அதன்படி, காஞ்சிபுரத்திலும் மருத்துவ கல்லூரி தொடங்க சுகாதாரத்துறை சார்பில் அனுமதி கேட்கப்பட்டுள்ளது. அனுமதி கிடைத்ததும் காஞ்சிபுரத்திலும் மருத்துவக்கல்லூரி அமைக்கப்படும்.



அறிஞர் அண்ணா பட்டு பூங்காவில் 25 சதவீத பணிகள் முடிவடைந்துள்ளது. எஞ்சிய பணிகள் விரைவாக நடத்தப்படும். கடைகள் இயல்பு நிலைக்கு திரும்பியதும் பட்டு சேலை விற்பனை அதிகரிக்கும்.



தமிழக நகரங்களை சுத்தமாக்குவதற்காக எல்லா பெருநகரத்திலும் ஸ்மார்ட் சிட்டி திட்டத்தின் கீழ் பல்வேறு பணிகள் நடைபெற்றுக் கொண்டு இருக்கின்றன. சாலைகள் செப்பனிடுதல், தெருவிளக்கு வசதிகள், பாதாள சாக்கடை திட்டங்கள் நிறைவேற்றப்பட்டுள்ளன.



காஞ்சிபுரம் ஜரிகை தொழிற்சாலையை நவீனப்படுத்துவது குறித்து சம்பந்தப்பட்ட துறை அமைச்சர்கள், அதிகாரிகள் மூலம் நடவடிக்கை எடுத்து எதிர்காலத்தில் ஜரிகை தொழிற்சாலை மூலம் ஜரிகை இங்கேயே வாங்க வழிவகை செய்யப்படும்.



காஞ்சிபுரத்தில் தற்போது உள்ள பஸ் நிலையம், காஞ்சிபுரத்தை அடுத்த கீழ்கதிர்பூருக்கு மாற்ற நடவடிக்கை எடுக்கப்படும்.



இவ்வாறு அவர் கூறினார்.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை