Skip to main content

அ.தி.மு.க-விற்கு எதிரி தி.மு.க தான் - எஸ்.பி. வேலுமணி பேச்சு

Feb 06, 2024 39 views Posted By : YarlSri TV
Image

அ.தி.மு.க-விற்கு எதிரி தி.மு.க தான் - எஸ்.பி. வேலுமணி பேச்சு 

அ.தி.மு.க-விற்கு எதிரி தி.மு.க தான். அ.தி.மு.க-விற்கும் தி.மு.க-விற்கும் இடையே மட்டும் தான் போட்டி. மற்ற கட்சிகள் அ.தி.மு.க-விடம் போட்டி போட முடியாது" என்று முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறினார்.



வருகின்ற 9 ஆம் தேதி அவிநாசியில் நீலகிரி நாடாளுமன்ற உறுப்பினர் ஆ.ராசாவை கண்டித்து நடைபெறும் ஆர்ப்பாட்டம் தொடர்பாக கோவை மாவட்ட அ.தி.மு.க அலுவலகத்தில் ஆலோசணைக் கூட்டம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்ட முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி பேசியதாவது:- 



"ஆ.ராசா மோசமான வார்த்தைகளில் எம்.ஜி.ஆரை விமர்சித்துள்ளார். எம்.ஜி.ஆர். இருந்த வரை கருணாநிதியால் தலை தூக்க முடியவில்லை. யார் கட்சி ஆரம்பித்தாலும் எம்.ஜி.ஆர். பெயரை சொல்லாமல் அரசியல் செய்ய முடியாது. ஆ.ராசா பேச்சிற்கு எதிர்ப்பு கடுமையாக கிளம்பியுள்ளது. 



ஸ்டாலின் எம்.ஜி‌.ஆரை தேர்தல் நேரத்தில் பெரியப்பா என்கிறார். ஆனால் ராசாவை அவர் கண்டிக்கவில்லை. தி.மு.க ஆட்சிக்கு வர காரணம் எம்.ஜி.ஆர். தி.மு.க-வை வளர்த்த பெருமை எம்.ஜி.ஆரையே சேரும். எம்.ஜி.ஆரை மோசமாக பேசிய ஆ.ராசாவிற்கு நீலகிரி பாராளுமன்ற தொகுதி மக்கள் பாடம் புகட்டுவார்கள். நியாயம் இல்லாமல் மோசமான வார்த்தையில் ஆ.ராசா பேசியுள்ளார். 



நல்லவர்கள் யாரும் இப்படி பேசமாட்டார்கள். தி.மு.க-வில் யாரும் நல்லவர்கள் இல்லை. அ.தி.மு.க அரசு திட்டங்களை தி.மு.க அரசு நிறுத்தி விட்டது. தி.மு.க அரசு 3 ஆண்டுகளில் எந்த திட்டமும் தரவில்லை. 



அ.தி.மு.க கட்சி, சின்னத்தை முடக்க பார்த்தார்கள். உலகில் மிகப்பெரிய கட்சி அ.தி.மு.க. தி.மு.க-விற்கு வாக்களிக்க மக்கள் யாரும் தயாராக இல்லை. தி.மு.க-வினரே தி.மு.க ஆட்சிக்கு வாக்களிக்க மாட்டார்கள். கூட்டணி குறித்து எடப்பாடி பழனிசாமி முடிவு செய்வார். அதிகமான எம்.பி.க்களை நாம் ஜெயிப்போம். 



தி.மு.க, பா.ஜ.க-வில் புதிதாக யாரும் சேர்வதில்லை. வயதானவர்கள், ஓய்வு பெற்றவர்கள் தான் அக்கட்சிகளில் சேர்க்கின்றனர். அ.தி.மு.க-வில் இளைஞர்கள் கொத்து கொத்தாக சேர்க்கிறார்கள்.



நமக்கு எதிரி தி.மு.க தான். அ.தி.மு.க-விற்கு போட்டி தி.மு.க உடன் மட்டும் தான். மற்ற கட்சிகள் நம்முடன் போட்டி போடவே முடியாது. சட்டமன்ற தேர்தல் எப்போது வந்தாலும் எடப்பாடி பழனிசாமி முதலமைச்சராக வருவார். 



நாடாளுமன்ற தேர்தலில் திமுக தோற்கடிக்கப்பட வேண்டும். நல்ல கூட்டணி வரும். அ.தி.மு.க கட்சியை பார்த்தே தி.மு.க பயப்படுகிறது. தொண்டர்களை சோர்வடைய செய்ய அ.தி.மு.க உடன் கூட்டணிக்கு யாரும் வரவில்லை என பொய் செய்திகளை பரப்புகிறார்கள்" இவ்வாறு அவர் மேடையில் பேசினார். 



இதையடுத்து செய்தியாளர்களிடம் பேசிய எஸ்.பி.வேலுமணி கூறியதாவது:- 



ஒருங்கிணைந்த கோவை மாவட்ட பொறுப்பாளர்கள் செயல்வீரர்கள் கூட்டம் நடைபெற்றது. ஆ.ராசா எங்களது நிறுவன தலைவர் எம்.ஜி.ஆரை பற்றி மோசமான வார்த்தையில் பேசியுள்ளார். 



அதை ஒட்டுமொத்தமாக அதிமுக தொண்டர்கள், பொதுமக்கள் கண்டித்துள்ளார்கள். வருகின்ற 9 ஆம் தேதி அவிநாசியில் ஆ.ராசாவை கண்டித்து எடப்பாடி பழனிசாமி தலைமையில் ஆர்ப்பாட்டம் நடைபெற உள்ளது. 



மக்கள் விரோத திமுக ஆட்சியில் கோவை மாவட்டத்திற்கு எந்த திட்டமும் வரவில்லை. கடந்த 3 ஆண்டுகளில் கோவை மாவட்டம் புறக்கணிக்கப்பட்டுள்ளது. நாடாளுமன்ற தேர்தலில் எடப்பாடியார் தலைமையில் நாற்பதும் வெல்வோம். 



தி.மு.க மாவட்ட செயலாளர்கள் அரசு திட்டங்களை துவக்கி வைக்கிறார்கள். அதிகாரிகள் திமுககாரர்களாக மாறிவிட்டார்கள். குடிநீர் பிரச்சனை உள்ளது. நிர்வாக திறன்மையின்மை காரணமாக மக்கள் சிரமப்படுகிறார்கள். மக்கள் பிரச்சனைகள் குறித்து மாவட்ட ஆட்சியரை சந்தித்து மனு அளிக்க உள்ளோம். இவ்வாறு அவர் தெரிவித்தார்.



இரட்டை இலை சின்னம் தங்களுக்கு தான் கிடைக்கும் என்ற ஓ.பி.எஸ் கூறிய கருத்து குறித்த கேள்விக்கு அவர் பதிலளிக்க மறுத்தபடி கிளம்பி சென்றார் என்பது குறிப்பிடத்தக்கது.


Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை