Skip to main content

வானத்திலிருந்து வெள்ளம் - தனித்தீவான பழைய காயல் கிராமம்...!

Dec 23, 2023 27 views Posted By : YarlSri TV
Image

வானத்திலிருந்து வெள்ளம் - தனித்தீவான பழைய காயல் கிராமம்...! 

 வெள்ளம் கடுமையாக பாதித்த பகுதிகளில் பழையகாயல் கிராமமும் ஒன்று. இங்கு இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலையில் வெள்ளம் முழுமையாக சூழ்ந்துள்ளது.



திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் பெய்த இடைவிடாத மழை காரணமாக, தாமிரபரணி உள்ளிட்ட ஆறுகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டது.



இதில் திருநெல்வேலி, தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிக்கப்பட்டன. ஆறுகளின் கரையோரம் இருக்கும் அனைத்து ஊர்களையும் வெள்ளம் சூழ்ந்தது. உயிர்ச்சேதம், சொத்துகள் சேதம், பொருட்சேதம், பயிர்ச்சேதம், கால்நடைகள் சேதம்என பல வகைகளிலும் இந்த 2 மாவட்ட மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளனர்.



குறிப்பாக வெள்ளம் கடுமையாக பாதித்த பகுதிகளில் பழையகாயல் கிராமமும் ஒன்று. இங்கு இன்னும் இயல்பு நிலைக்கு திரும்ப முடியாத நிலையில் வெள்ளம் முழுமையாக சூழ்ந்துள்ளது. தூத்துக்குடி- திருநெல்வேலி செல்லும் பிரதான சாலையில் வெள்ளநீர் இன்னும் ஓடிக் கொண்டே இருக்கிறது. இந்த சாலையில் செல்ல முடியாத சூழலில், 100க்கும் மேற்பட்ட கிராமங்களுடன் தொடர்பு முற்றிலும் துண்டிக்கப்பட்டுள்ளது.



இந்த கிராமங்களில் சிக்கித் தவிக்கும் பல்லாயிரகணக்கான மக்களின் நிலைமை என்னவென்று தெரியவில்லை. மீட்பு படையினரால் கூட அவர்களை தொடர்பு கொள்வதில் கடும் சிக்கல் நிலவி வருகிறது. வெள்ளநீர் முழுவதும் வடிந்து சாலை இயல்பு நிலைக்கு திரும்பினால் மட்டுமே மறுபகுதிக்கு செல்ல முடியும். இங்கு விவசாய நிலங்கள் முழுவதுமாக சேதமடைந்துள்ளன.



பாதிக்கப்பட்ட விவசாயி சிங்காரவேல் கூறுகையில், ’எனக்கு 71 வயசு ஆகுது. நான் பிறந்த நாள்லருந்து இங்க வெள்ளம் வந்துருக்கு. ஆனா அப்படியே வடிஞ்சிரும். வானத்துல இருந்து மழைதான் வரும்னு சொல்லுவாங்க. ஆனா இங்க வானத்துல இருந்து வெள்ளமே வந்துருக்கு



இதுல 63 கிராமங்கள் துண்டு துண்டா ஆகிருக்கு.  என்னோட ஒரு ஏக்கர் வாழைத் தோட்டம் சுத்தமா போயிருச்சு.



இதுல எனக்கு 3 லட்ச ரூபாய் நஷ்டம்.  நான் ஒரு சாதரண விவசாயி தான். 10 ஏக்கர், 15 ஏக்கர் போட்டவங்களுக்கு எல்லாம் எவ்வளவு நஷ்டம் இருக்கும் சொல்லவே முடியல.



தூத்துக்குடி மாவட்டத்துல ஸ்ரீவைகுண்டம் தாலுகா ரொம்ப பாதிக்கப்பட்டுருக்கு. அரசாங்கம் தான் எங்களுக்கு ஏதாவது செய்யணும். எல்லாமே இழந்துட்டோம். எங்ககிட்ட எதுவுமே இல்ல. இனிமேல் எல்லாம் புதுசா தான் ஆரம்பிக்கணும். இந்த வயசுல இதெல்லாம் நாங்க பாக்கணும்னு ஆண்டவன் இப்படி ஒரு அனுபவத்தை எங்களுக்கு கொடுத்துட்டான்’, என்று வேதனையுடன் கூறுகிறார் விவசாயி சிங்காரவேல்…




Categories: இந்தியா
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை