Skip to main content

கனடாவில் வரலாறு காணாத வெப்பம் - 130 பேர் பலி

Jul 01, 2021 178 views Posted By : YarlSri TV
Image

கனடாவில் வரலாறு காணாத வெப்பம் - 130 பேர் பலி 

உலகின் மிகவும் குளுமையான நாடுகளில் ஒன்று கனடா. பனி மழை மற்றும் பனிக்காற்று அந்த நாட்டு மக்களுக்கு பழகிப்போன ஒன்று. ஆனால் வழக்கத்துக்கு மாறாக கனடாவில் தற்போது கடும் வெப்பம் வாட்டி வதைத்து வருகிறது. அங்கு வரலாறு காணாத வகையில் வெப்பம் பதிவாகியுள்ளது.



கனடாவின் மேற்கு பகுதியில் அமைந்துள்ள பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தில் கடந்த சில நாட்களாக கடும் வெப்ப அலை வீசி வருகிறது.



பிரிட்டிஷ் கொலம்பியாவின் தலைநகர் விக்டோரியாவிலிருந்து 155 கிலோ மீட்டர் தொலைவிலுள்ள லிட்டன் என்ற கிராமத்தில் நேற்று முன்தினம் அதிகபட்சமாக 49.5 டிகிரி செல்சியஸ் வெப்பம் பதிவானது.



வரலாறு காணாத இந்த வெப்பம் காரணமாக பிரிட்டிஷ் கொலம்பியா மாகாண மக்கள் கடும் இன்னலுக்கு ஆளாகியுள்ளனர். குறிப்பாக முதியவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்டவர்கள் கடுமையான பாதிப்பை எதிர் கொண்டுள்ளனர்.



பிரிட்டிஷ் கொலம்பியா மாகாணத்தின் பிரதமர் ஜான் ஹொர்கன் ‘‘மாகாணம் இதுவரை அனுபவித்த வெப்பமான வாரம் குடும்பங்களுக்கும் சமூகங்களுக்கும் பேரழிவு தரும் விளைவுகளுக்கு வழிவகுத்தது’’ என்றார்.



இதனிடையே கடந்த வெள்ளிக்கிழமை தொடங்கி தற்போது வரை வெப்பம் காரணமாக 130 பேர் உயிரிழந்ததாக பிரிட்டிஷ் கொலம்பியா போலீசார் தெரிவித்துள்ளனர். குறிப்பாக வான்கூவர் நகரில் மட்டும் கடந்த வெள்ளிக்கிழமை முதல் இப்போது வரை 65 பேர் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.



வான்கூவர் நகரின் போலீஸ் அதிகாரி இதுபற்றி கூறுகையில் ‘‘உங்களுடைய நண்பர்கள், அண்டை வீட்டார், குடும்ப உறுப்பினர்கள், குறிப்பாக வயோதிகர்கள் இருந்தால், அவர்களின் நிலைமையை கவனியுங்கள். இந்த வெப்பநிலை நமது சமூகத்துக்கு மிக மோசமானதாக உள்ளது. அதுவும் உடல் நல பிரச்சினைகளை எதிர்கொண்டவர்களுக்கும் வயோதிகர்களுக்கும் இது மிகப்பெரிய பிரச்சினை’’ என கூறினார்.



மக்கள் முடிந்தவரை வெளியில் வருவதை தவிர்க்கவும், குளிர்சாதன அறைகளில் இருக்கவும், அதிக அளவு தண்ணீர் எடுத்துக் கொள்ளவும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.



இதனிடையே கனடா வானிலை மையம் பிரிட்டிஷ் கொலம்பியா மட்டும் இன்றி சஸ்காட்செவன், மனிடோபா உள்ளிட்ட மாகாணங்களிலும் வடமேற்கு பிராந்தியங்களிலும் கடுமையான வெப்பநிலை நிலவும் என்று எச்சரித்துள்ளது.



கனடா வானிலை மையத்தின் மூத்த ஆய்வாளர் டேவிட் பிலிப்ஸ் ‘‘உலக அளவில் மிகவும் குளுமையான மற்றும் பனி அதிகம் பொழியும் இரண்டாவது நாடு எங்களுடையது. அடிக்கடி காணப்படும் பனி மழை, பனிக்காற்று பற்றி நாம் அதிகம் பேசியிருப்போம். ஆனால், இப்படியொரு வெப்பநிலை பதிவாகும் என்பது பற்றி இதுவரை நாம் பேசியது கிடையாது. இப்போதுள்ள நிலையுடன் துபையை ஒப்பிட்டால் அங்கு இதை விட குளுமையான நிலை இருக்கும் என்பது போல உள்ளது’’ என கூறினார்.



இதனிடையே கனடாவை போல் அமெரிக்காவின் வடமேற்கு பகுதிகளில் வெப்ப அலை வீசி வருவதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. அமெரிக்காவின் போர்ட்லாந்து மற்றும் சியாட்டில் ஆகிய நகரங்கள் 1940 களுக்கு பிறகு அதிக வெப்பநிலையை கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.



போர்ட்லாந்தில் 46.1 செல்சியஸ் டிகிரியும் சியாட்டிலில் 42.2 செல்சியஸ் டிகிரியும் வெப்பம் பதிவானதாக அமெரிக்க வானிலை மையம் கூறியுள்ளது


Categories: உலகம்
Image
தற்போதைய செய்திகள்
Image

பெட்ரோல் டீசல் விலை தமிழ்நாடு

  • பெட்ரோல்
    77.58/Ltr
  • டீசல்
    70.34/Ltr ( 0.21 )
Image பிரபலமானவை